உதயநிதியை துணை முதல்வராக அறிவிக்க வேண்டும்.. தேமுக வலியுறுத்தல்
சென்னை: தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினை அறிவிக்க வேண்டும் என்று திமுகவினர் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள். இதனிடையே திமுகவின் தோழமை கட்சிகளில் ஒன்றான தேசிய முன்னேற்றக் கழகமும் கோரிக்கை வைத்துள்ளது.
திமுகவில் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக செல்வாக்கு உள்ள தலைவராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். திமுக இளைஞரணி பொதுச்செயலாளரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் மட்டுமல்ல, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சராகவும் இருக்கிறார். முதல்வரை போல் எல்லா துறைகளும் சம்பந்தப்பட்ட முக்கியமான துறையாகும். அதே நேரம் இதுவரை துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்படவில்லை.

நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆறு மாதம் முன்பே துணை முதல்வராக ஸ்டாலினை அறிவிக்க வேண்டும் என்று திமுகவினர் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தார்கள். சேலத்தில் நடந்த இளைஞரணி மாநாட்டில் முகப்பில் வைக்கப்பட்டிருந்த தலைவர்களது கட்அவுட்டுகளில் பெரியார், அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையில் உதயநிதி ஸ்டாலின் படமும் இடம்பெற்றிருந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற இளைஞரணியினர் மட்டுமின்றி கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் உதயநிதியை புகழ்ந்தார்கள். இளமையும், சுறுசுறுப்பும் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின், இந்துத்துவா அரசியலை எதிர்கொள்ள துணிவுமிக்க தலைவராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். இப்படிப்பட்டவருக்கு துணை முதல்வர் பதவி விரைவில் கிடைக்கும் என்று நம்புவதாக ஆதங்கங்களை அப்போது வெளிப்படுத்தினார்கள். ஆனால் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட உள்ளதாக கூறப்படும் முற்றிலும் வதந்தி என்று சேலம் மாநாட்டிற்கு முன்பே முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 இடங்களில் திமுக வென்றது. தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் திமுக வென்றுள்ளது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் உள்ள திமுகவினர், உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர். அந்த வரிசையில் திமுக கூட்டணியில் உள்ள தேசிய முன்னேற்றக் கழகமும் கோரிக்கை வைத்துள்ளது.
தேசிய முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜிஜி சிவா வெளியிட்ட அறிக்கையில், "அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக மாநில இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்ற பிறகு 2019 நாடாளுமன்றத் தேர்தல் அதன் பிறகு ஊரக உள்ளாட்சி மன்றத் தேர்தல் 2021 சட்டமன்ற பொது தேர்தல் மீண்டும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வதற்கும் மையப்புள்ளியாக இருந்தார்.
குறிப்பாக நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றதற்கும் முக்கிய காரணமாக அமைந்தவர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள். மேலும் தமிழகத்தின் இளைஞர்களின் முகமாக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் அவர்களை திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் உயர்மட்ட மூத்த நிர்வாகிகள் வரை அனைவரும் திமுக கட்சியின் வருங்கால எதிர்காலம் என்று வெளிப்படையாக பேசி வரக்கூடிய காட்சியை பார்க்கிறோம்.
தமிழகத்தில் இருக்கக்கூடிய பெரும்பாலான மக்கள் மத்தியில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கிட வேண்டுமென பொதுவான கருத்து நிலவுவதை நாமும் பார்க்க முடிகிறது. மேலும் எங்களைப் போன்று வளர்ந்து வரும் கட்சிகளை அரவணைப்பதிலும் சரி பெரிய கட்சிகளிடம் அணுகுமுறையும் சரி, கலைஞர் அவர்கள் ராஜதந்திரமும் முதல்வர் மு க ஸ்டாலின் ஆகிய தங்களின் பக்குவமும் உதயநிதி ஸ்டாலினிடம் இருப்பதை காண முடிகிறது.
மேலும் தமிழகத்தை வழிநடத்திட இளமை துடிப்போடு இருக்கக்கூடிய அனைத்து தகுதிகளும் இருக்கக்கூடிய திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் இந்த பொன்னான தருணத்தில் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்து அனைவரின் நல் எண்ணங்களையும் பூர்த்தி செய்திட வேண்டி தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலினுக்கு தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பணிவான கோரிக்கை வைக்கிறோம். தமிழகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications