செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்.. தமிழ்நாட்டிற்கு பெருமை.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி
சென்னை: செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தமிழ்நாட்டிற்கும் அதன் நீடித்த கலாச்சார பாரம்பரியத்திற்கும் ஒரு பெருமைமிக்க தருணம் என்று பதிவிட்டுள்ள ஸ்டாலின், இந்தியாவின் மராட்டிய ராணுவ நிலப்பரப்புகளின் ஒரு பகுதியாக UNESCO உலக பாரம்பரிய தளமாக பொறிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட செஞ்சி கோட்டையை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் செஞ்சி கோட்டையை யுனெஸ்கோ பிரதிநிதி ஹவாஜங் லீ ஜகாம்ஸ் ஆய்வு செய்தார். சத்ரபதி சிவாஜி ஆட்சி செய்த 12 கோட்டைகளை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என யுனெஸ்கோவுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்தது.

செஞ்சி கோட்டை
இதன்படி மகாராஷ்டிராவில் உள்ள 11 கோட்டைகளும், செஞ்சி கோட்டையும் இந்த பட்டியலில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், செஞ்சி கோட்டையை உலகப் பராம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இந்தியாவில் மராட்டியர்களால் கட்டப்பட்ட 12 கோட்டைகளுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் அளித்துள்ளது.
6வது சின்னம்
செஞ்சி கோட்டை உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளதால், கோட்டையைப் பராமரிக்க பாதுகாக்க மத்திய அரசால் நிதி ஒதுக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் பிரகதீஸ்வரர் கோயில், கும்பகோணம் ஐராவதேஸ்வரர் கோயில், ஜெயகொண்டம் கங்கை கொண்ட சோழபுரம் கோயில், மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள், நீலகிரி மலை ரயில் பாதை ஆகிய 5 இடங்களும் யுனெஸ்கோ அங்கீகரித்த உலக பாரம்பரிய சின்னங்களாகும்.
செஞ்சி கோட்டை பெருமை
இந்தப் பட்டியலில் 6வதாக செஞ்சிக் கோட்டை இடம் பிடித்துள்ளது. செஞ்சி கோட்டையில் கோயில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம் போன்றவை அமைந்துள்ளது. அதேபோல் கலைநயத்துடன் கட்டப்பட்டிருக்கும் கல்யாண மண்டபம் கோட்டையின் முக்கியமான முக்கிய கவன ஈர்ப்பு மையம் உள்ளது.
ஸ்டாலின் ட்வீட்
இந்த நிலையில் செஞ்சிகோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், 'கிழக்கின் ட்ராய்' என்று பிரபலமாக அழைக்கப்படும் GingeeFort, இந்தியாவின் மராட்டிய ராணுவ நிலப்பரப்புகளின் ஒரு பகுதியாக UNESCO உலக பாரம்பரிய தளமாக பொறிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
பெருமையான தருணம்
இந்த கம்பீரமான மலைக்கோட்டை இப்போது தமிழ்நாட்டின் பெருமைமிக்க UNESCO தளங்களின் பட்டியலில் இணைகிறது. இதில் கிரேட் லிவிங் சோழர் கோயில்கள், மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச்சின்னங்கள், நீலகிரி மலை ரயில் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியவை அடங்கும். தமிழ்நாட்டிற்கும் அதன் நீடித்த கலாச்சார பாரம்பரியத்திற்கும் ஒரு பெருமைமிக்க தருணம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications