என்னிடம் பணம் இல்லை! பெரிய கட்சிகளுடன் போட்டி போட முடியவில்லை! கைவிரிக்கும் ஜி.கே.வாசன்!
சென்னை: தங்களால் பொருளாதார ரீதியாக பெரிய கட்சிகளுடன் போட்டி போட முடியவில்லை என்பது உண்மை தான் என்றும் தன்னிடம் பணம் கிடையாது எனவும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
மத்தியில் பாஜக, மாநிலத்தில் அதிமுக என்ற நிலைப்பாட்டுடன் இருப்பதாக கூறும் அவர், இரண்டு கட்சிகளின் நலன் விரும்பியாக தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளது என்றார். மேலும், தற்போது பாஜக அதிமுக இடையே கூட்டணி முறிந்திருக்கிறது என்றாலும் கூட தேர்தல் நேரத்தில் என்ன நடக்கும் என்று கணிக்க முடியாது என்று பொடி வைத்து பேசியிருக்கிறார்.

அதிமுகவும் பாஜகவும் மீண்டும் கூட்டணி சேர வேண்டும் என விரும்பும் தலைவர்களில் ஜிகே வாசனும் ஒருவர் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. 3வது முறையாக தேர்தலில் வெல்வது என்பது சாதாரண விஷயமல்ல என்றும் மோடி மீண்டும் பிரதமராவது உறுதி என்றும் அதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதென்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியை பொறுத்தவரை அது முரண்பாட்டின் மொத்த உருவம் என்றும் அமலாக்கத்துறையை வைத்து திமுகவை மத்திய பாஜக அரசு மிரட்டுவதாக கூறுவது தவறு எனவும் பாஜகவினரையே விஞ்சும் அளவுக்கு பாஜகவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அமைப்புகளே தவிர பாஜக கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்புகள் கிடையாது எனக் கூறினார்.
தமிழ்நாட்டில் கூட சிபிசிஐடி, லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் ரெய்டு நடத்துகிறார்கள் என்றும் அதற்காக தமிழக அரசு இந்த அமைப்புகள் மூலம் மிரட்டுகிறது என்று கூறலாமா எனவும் வினவிய ஜிகே வாசன், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
இதனிடையே வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் ஜிகே வாசன் கரம் கோர்ப்பாரா அல்லது அதிமுக பக்கம் சாய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜிகே வாசனுக்கு ராஜ்யசபா எம்.பி. சீட் கொடுத்து அரசியலில் அவர் இழந்த அடையாளத்தை மீட்டுக் கொடுத்தது அதிமுக என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications