சிவப்பு ஆடையில் நுழைந்த தமிழரசி.. பேரவையில் செம கேள்வி.. "மகிழ்ச்சியில் சக்திகள்"! சேகர்பாபு அசத்தல்
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக, திமுக அரசு விரோதமாக செயல்பட்டு வருவதாக இந்து முன்னணி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இந்துக்களுக்கு மட்டும் விரோதமாக நடக்கிறது. இந்து கோவில்களை மட்டும் இடிக்கிறார்கள்.. கோவில் சொத்துகளை காப்பாற்ற வேண்டும் என்று பாஜக, இந்து முன்னணி தரப்பில் தொடர்ந்து புகார் கூறிவரும் நிலையில், "திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் சக்திகள் மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்" என்று அறநிலையத்துறை அமைச்சர் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகிலுள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழநி பழனியாண்டவர் கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, கடந்த வருடம் நடைபெற்றது.

தமிழக அரசு நடத்திய பழனி மாநாடு
திமுக அரசு நடத்தியிருந்த இந்த 2 நாள் மாநாட்டினை பாஜக உற்று நோக்கியது.. "பழனியில் நடந்தது ஆன்மிக மாநாடு அல்ல.. அது இந்து விரோத மாநாடு. முருகனை வைத்து தமிழ்நாட்டில் ஏமாற்று அரசியல் செய்வதை இந்துக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சனாதன இந்து தர்மத்தின் எதிரி உதயநிதி ஸ்டாலின்" என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அப்போது விமர்சித்திருந்தார்.
"சனாதன தர்மத்தை எதிர்த்துப் பேசினாலும், ஆன்மீகத்தைப் பேசாமல் அரசியல் செய்ய முடியாது என்பதை இந்த முத்தமிழ் முருகன் மாநாடு உணர்த்துகிறது. ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன் என்பதன் ஒரு யுக்திதான் இது" என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்திருந்தார். எனினும், பல்வேறு விமர்சனங்களை கடந்து, பழனியில் நடைபெற்ற முருகன் மாநாடு, முருகப் பக்தர்களின் கவனத்தை வெகுவாகவே ஈர்த்திருந்தது.
சக்தி மாநாடு - சமத்துவம்
இந்நிலையில், சக்தி மாநாடு குறித்த கேள்வி சட்டப்பேரவையில் இன்று எழுந்துள்ளது.. தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது.. இதில், முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகிறார்கள்..
அந்தவகையில் இன்று, கேள்வி-பதில் நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, "பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் முருகன் மாநாடு நடத்தி பக்தர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டது போல சமத்துவம் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சக்தி மாநாடு நடத்தி சமத்துவம் பேணப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
திருவிளக்கு பூஜைகள்
இதற்கு அமைச்சர் சேகர் பாபு பதிலளிக்கும்போது, "திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் சக்திகள் மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் என்பதை உறுப்பினர் நன்றாக அறிவார். முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் இருளைப் போக்கி ஒளி தருகின்ற வழிபாடு என கருதப்படும் திருவிளக்கு பூஜையை முதன் முதலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனோடு இணைந்து முத்தாரம்மன் கோவிலில் தீப ஒளி ஏற்றுகின்ற பவுர்ணமி திருவிழா நடத்தப்பட்டது.
அது தற்போது 20 திருக்கோவில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், இதுவரை 58 ஆயிரத்து 600 பேர் திருவிளக்கு பூஜையில் பலனடைந்துள்ளனர். கடந்த வருடம் ஆன்மீக பயணம் என்ற பயணத்தை ஏற்படுத்தி 1,031 சக்திகள் ஆன்மீக பயணத்தில் பலன் அடைந்திருக்கிறார்கள். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 60,000 சக்திகள் பலனடைந்து இருப்பதால் சக்தி மாநாடு என்ற ஒன்று தனியாக தேவைப்படவில்லை" என்றார்.
சக்தி மாநாடு நடத்த கோரிக்கை வைத்த சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, சிவப்பு நிற சேலையை அணிந்திருந்து இன்று பேரவைக்கு வந்திருந்தார்.. சிவப்பு நிற ஆடையுடன், சக்தி மாநாடு குறித்து கேள்வி எழுப்பியது, தமிழக பக்தர்களின் கவனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications