குடும்ப அட்டைதாரர்களுக்கு இனி கார்டு வந்துரும்.. ரேஷன் கடை ஊழியர்களுக்கும் "விடுமுறை" நாளில் ஹேப்பி
சென்னை: ரேஷன் கடை ஊழியர்கள், தங்கள் விடுமுறை நாட்களிலும், கடைக்கு வந்து பொருட்களை பெற்று, கணக்கு பார்த்து வைக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டு விடுகிறது. இதுகுறித்து பலநாட்கள் தங்கள் கோரிக்கையை விடுத்து வந்தநிலையில், அதுகுறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக கூட்டுறவுத்துறை சார்பில் சுற்றறிக்கை ஒன்றும் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மானிய விலையில் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கிறது. அத்துடன் அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களை சென்றடைகிறது. அந்தவகையில், கோடிக்கணக்கான ரேஷன்தாரர்கள் பலன்பெற்று வருகிறார்கள்.

தொடர் விடுமுறைகள்
ரேஷன் கடைகளுக்கு கடந்த வாரத்தில் மட்டும் மொத்தம் 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது.. அதாவது, ஏப்ரல் 10ம் தேதி வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
ஏப்ரல் 11 ம் தேதி வெள்ளிக்கிழமை வார விடுமுறை என்பதால் அன்றைய தினமும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விடபபட்டது.. ஏப்ரல் 12 ம் தேதி 2வது சனிக்கிழமை என்பதால் அன்றும் விடுமுறை. இதன் காரணமாக கடந்த வாரத்தில் மட்டும் தொடர்ந்து 3 தினங்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது..
விடுமுறை நாட்களிலும் பணி?
இந்நிலையில், ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாளான, மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகளில், ரேஷன் பொருட்களை அனுப்ப வேண்டாம் என்று கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அதாவது, மாதத்தின் முதல் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடைகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன.. இதற்கு பதிலாக முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகளில் கடைகளுக்கு வார விடுமுறை அளிக்கப்படுகிறது. ரேஷன் ஊழியர்களுக்கு விடுமுறையாக இருந்தாலும், முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகளில், ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் பணி நடந்து வந்தது. கடைக்கு வந்து பொருட்களை பெற்று, கணக்கு பார்த்து வைக்க வேண்டிய கட்டாயமும் ஊழியர்களுக்கு ஏற்பட்டது.
எனவே, விடுமுறை நாட்களில் பொருட்களை அனுப்ப வேண்டாம் என்று ரேஷன் ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்கள் சங்கத்தினருடன், கடந்த மார்ச் 3ம் தேதி பேச்சுவார்த்தை நடந்தது.
வெளியான சுற்றறிக்கை
அப்போது, பணியாளர் சங்கத்தின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டு, அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன்படியே, கூட்டுறவு துறை பதிவாளர் வாயிலாக, விடுமுறையாக உள்ள வெள்ளிக்கிழமை நாளில், ரேஷன் பொருட்கள் அனுப்பும் பணியை மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், முதல் இரண்டு வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால், அந்த நாட்களில், அத்தியாவசிய பொருட்கள் அனுப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இது ரேஷன் ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தந்து வருகிறது.
புதிய ரேஷன் கார்டுகள் குறைப்பு?
இதனிடையே, புதிய ரேஷன் கார்டுகளின் வினியோகத்தை குறைப்பதாக திடீர் புகார் பரபரத்து வருகிறது.. தமிழகத்தில் மாதத்திற்கு சராசரியாக, 40,000 - 50,000 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஓராண்டில், 1.79 லட்சம் கார்டுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக குறை கூறப்படுகிறது.
இதுகுறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "ஒரே குடும்பத்தில் வசித்து, புதிய கார்டுக்காக உரிய ஆவணம் இல்லாமல், தனி கார்டு கேட்கும் விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப்படுகின்றன, தகுதியான நபர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது" என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல, 4 நாட்களுக்கு முன்பு சட்டசபையில் அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை 19 லட்சத்து 62 ஆயிரத்து 717 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு விரைவில் ரேஷன் கார்டு வழங்க இருக்கிறோம். இதுவரை 9 லட்சத்து 44 ஆயிரத்து 452 பேர் தபால் மூலம் நகல் அட்டை பெற்றிருக்கிறார்கள்" என்று தெரிவித்திருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications