கொரோனா எப்போது குறையும்.. நிருபர் கேள்வி.. "இறைவனுக்குத்தான் தெரியும்.." மேலே கை காட்டிய முதல்வர்
சென்னை: கொரோனா எப்போது கட்டுக்குள் வரும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சென்னை வேளச்சேரியில் 350 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார். இதற்கு பிறகு, எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை எந்த ஒரு மருந்தும் கண்டுபிடிக்காத சூழ்நிலையிலும், மருத்துவ நிபுணர்கள், உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதார அமைச்சகம் கொடுக்கக்கூடிய அறிவுரைகள்படி, சிறப்பான சிகிச்சை அளித்த காரணத்தால்தான் இத்தனை அதிகமானோர் தமிழகத்தில் குணமடைந்துள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு.. மக்களை கஷ்டப்படுத்த கிடையாது.. எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
பரிசோதனைகள்
தமிழகத்தில், இந்தியாவில்தான் அதிகபட்சமாக 83 பரிசோதனை மையங்கள் இருக்கின்றன. தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துக் கொள்கிறேன். சென்னையில் 17,500 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சென்னை மக்கள் தொகை
சென்னையில் மக்கள் தொகையைக் குறைப்பதற்கு நீண்டகால செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு, மக்கள் தொகையை மக்கள்தான் கட்டுப்படுத்த வேண்டும். இதை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது. குடிசைவாசிகளுக்கு அரசு வீடு கட்டிக் கொடுக்கிறது. ஆனால் அங்கு மக்கள் இருப்பதில்லை. மறுபடியும் குடிசைப் பகுதிகளுக்கு வந்து விடுகிறார்கள். எனவே மக்கள் ஒத்துழைப்புதான் மிகவும் அவசியம். சுகாதாரமான முறையில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் நிலை இருந்தால் இதுபோன்ற பாதிப்புகள் வராது என்றார் முதல்வர்.
சமூக இடைவெளி இல்லை
மேலும் அவர் கூறுகையில், காய்கறி, இறைச்சி கடைகள் என மக்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ அங்கெல்லாம் சமூக இடைவெளியை பின்பற்றுவது கிடையாது. எந்த அளவுக்கு பாதிப்பு வரும் என்பதை மக்கள் அறிய மாட்டேன் என்கிறார்கள். தங்களுக்கு நோய் பாதிப்பு வராது என்று நினைத்துக் கொள்கிறார்கள். சமீபகாலமாகத்தான் கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது என்றார் எடப்பாடியார்.
முழு ஊரடங்கு நீட்டிப்பு
முழு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வாய்ப்பு உள்ளதா என்ற நிருபர்கள் கேள்விக்கு, "இதுவரை அப்படி வாய்ப்பு இல்லை" என்ற முதல்வர் மேலும் கூறுகையில், இந்த தொற்று புதிதாக வந்தது. அது எப்படி செயல்படும் என்பதை யாரும் சொல்லமுடியவில்லை. பாதிக்கப்பட்டவர்களை குணமடைய செய்ய, என்ன வழியோ, எந்த மாதிரி சிகிச்சை செய்வது, எந்த மாதிரி வசதிகளை ஏற்படுத்துவது என்பது பற்றி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இறைவனுக்குத்தான் தெரியும்
கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்ற நிருபரின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர், "இறைவனுக்குத்தான் தெரியும்" என்று வானத்தை நோக்கி கை காட்டியபடி, பதிலளித்தார். மேலும் அவர் கூறுகையில், எனக்கு தெரியுமா, உங்களுக்கு தெரியுமா. நாம் என்ன டாக்டரா? மருத்துவ நிபுணர்கள் இதை படிப்படியாகத்தான் குறைக்க முடியும், முழுமையாக ஒழிக்க முடியாது என்கிறார்கள். இப்போதைக்கு இந்த நோயை தடுக்க முடியுமே தவிர, முழுமையாக ஒழிக்க முடியாது என்று, உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத்துறை நமது மருத்துவ நிபுணர் குழு அனைவரும் தெரிவிக்கிறார்கள்.
கட்டுப்பாடு தேவை
இதற்கு ஒரே வழி நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்வது தான். ஒவ்வொருவரும் இந்த நோயின் தன்மையை அறிந்தும், வீரியத்தை அறிந்து கட்டுப்படுத்திக் கொள்வதுதான் தப்பிப்பதற்கான வழிமுறையாகும். வெளியே சென்றால் முக கவசம் அணிய வேண்டும், பொருட்களை வாங்கும்போது இடைவெளிவிட்டு பொருட்கள் வாங்க வேண்டும். அப்படி செய்தால், இந்த நோய் பரவலை தடுக்க முடியும். இதுதான் இப்போதைய ஒரே மருந்து. இதை மக்களின் ஒத்துழைப்பு மூலமாகத்தான் தடுக்க முடியும். இவ்வாறு, எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.