பேய்க்கும் பேய்க்கும் சண்டை..சீனா அமெரிக்காவால் தள்ளாடுது தங்க மார்க்கெட்! வெலவெலக்க வைக்கும் வெள்ளி
சென்னை: அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தக போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகளாவிய நிதிச் சந்தைகளில் அச்சம் நிலவி வருகிறது. இதன் காரணமாக பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கம், வெள்ளி விலைகள் சாதனை அளவிற்கு உயர்ந்துள்ளன. மேலும், அமெரிக்காவின் இந்த பழிவாங்கும் வரி கொள்கை தொடர்ந்தால், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் மேலும் கட்டுக்கடங்காமல் உயரும் என சந்தை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இன்று வெளியான ப்ளூம்பெர்க் (Bloomberg) தரவுகளின்படி, தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $4,060 வரை உயர்ந்துள்ளது. இது தங்க சந்தையில் இதுவரை எட்டியுள்ள அதிகபட்ச விலை என குறிப்பிடப்படுகிறது. மேலும், வெள்ளி விலை 1.1% உயர்ந்து $51 ஐ நெருங்கியுள்ளது.
இதேபோல் பிளாட்டினம் மற்றும் பல்லேடியம் விலைகளும் தலா 2% க்கும் மேல் உயர்ந்துள்ளன. வெள்ளி விலைகள் கடந்த எட்டு வாரங்களாக தொடர்ந்து உயர்வைச் சந்தித்து வருவது முதலீட்டாளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா சீனா வர்த்தக போர்
இதேசமயம், உலகின் பல மத்திய வங்கிகள் தங்கத்தை பெருமளவில் வாங்குவது, தங்க ETF களில் அதிகரித்து வரும் முதலீடுகள், மற்றும் பெடரல் ரிசர்வ் வட்டி விகித குறைப்புகள் ஆகியவையும் விலைகள் உயர்வுக்கு காரணமாகியுள்ளன. அமெரிக்கா - சீனா வர்த்தக மோதல்களால் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட அதிர்வுகள், முதலீட்டாளர்களை பாதுகாப்பான முதலீடுகளான தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களுக்கு தள்ளியுள்ளது. மேலும், அமெரிக்க அரசின் புதிய வரி விதிப்புகள் காரணமாக பிளாட்டினம், பல்லேடியம் போன்ற உலோகங்களும் கடுமையான விலை உயர்வைச் சந்தித்துள்ளன.
தங்கம் விலை உயர்வு
இந்நிலையில், லண்டனில் பணப்புழக்கம் இல்லாதது குறித்த கவலைகள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. இதனால் 1980 ஆம் ஆண்டு உருவான வெள்ளி விலை சாதனை ($52.50) தற்போது மீண்டும் எட்டப்படும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். சில சர்வதேச வர்த்தகர்கள் லண்டனில் உள்ள அதிக விலை பிரீமியங்களைப் பயன்படுத்தி, அட்லாண்டிக் கடல் வழியாக வெள்ளி பார்களை ஏற்றுமதி செய்யும் முன்பதிவுகளை தொடங்கியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளி விலை சாதனை
அமெரிக்காவின் இந்த பழிவாங்கும் வரி கொள்கை தொடர்ந்தால், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் மேலும் கட்டுக்கடங்காமல் உயரும் என சந்தை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதேசமயம், லண்டன் சந்தையில் லாப முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டால் சிறிய அளவில் விலை சரிவும் ஏற்படலாம் எனவும் நம்பிக்கை வட்டாரங்கள் கூறுகின்றன. சிங்கப்பூரில் இன்று காலை (அக்டோபர் 12) ஸ்பாட் தங்கம் 1.1% உயர்ந்து $4,060.01 ஆகவும், வெள்ளி 0.7% உயர்ந்து $50 க்கும் மேலாகவும் வர்த்தகமடைந்துள்ளது.
உலக சந்தை அதிர்ச்சி
இதேவேளை, பிளாட்டினம் $1,630, பல்லேடியம் $1,445 அளவில் வர்த்தகமடைந்து, விலைமதிப்பற்ற உலோகங்கள் அனைத்தும் புதிய உச்சத்தை நோக்கிச் செல்கின்றன. ஆனால், இந்த விலை உயர்வு சீனாவை பாதிக்கவில்லை. உலக பொருளாதாரம் தடுமாறிக் கொண்டிருக்க, சீனா அமைதியாக ஆனால் திட்டமிட்டபடி ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்து வருகிறது. அது என்னவென்றால், உலக பொருளாதாரத்தின் அடித்தளமான தங்கத்தை மிகப் பெருமளவில் வாங்கி கையிருப்பில் வைத்துக் கொள்வது.
சீனா தங்க கையிருப்பு
கடந்த 10 மாதங்களாக, சீனா ஒரு நாள் கூட விடாமல் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. 2025 ஆகஸ்ட் மாதம் வரை, அந்த நாட்டின் கையிருப்பில் உள்ள தங்கம் 74 மில்லியன் அவுன்ஸ். அதாவது சுமார் 20.97 லட்சம் கிலோ என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன் மதிப்பு சுமார் 254 பில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications