தங்கம் விலையில் நடக்கப்போகும் மிகப்பெரிய மாற்றம்.. சான்ஸை விடாதீங்க! இனி வரும் 3 மாதமும் எகிறுமாம்!
சென்னை: தங்கம், இந்தியாவில் பொருளாதாரத்தில் பல்வேறு தட்டுகளில் இருக்கும் மக்களின் முக்கியமான முதலீடாக இருக்கிறது. தங்கம் விலை இந்த ஆண்டின் ஏப்ரல் மாதவாக்கில் புதிய உச்சத்தை தொட்ட நிலையில் அதன்பிறகு ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 3 மாதங்களில் தங்கம் விலை கடுமையான உயர்வைச் சந்திக்கக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கத்தின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருவதைப் பார்க்கிறோம். சர்வதேச சந்தை வர்த்தகம் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது.

புதிய உச்சம்: ஆனால், அடுத்தடுத்த மாதங்களில் ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருந்தது. கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இறக்குமதி சுங்க வரி குறைப்பால் தங்கம் விலை சரிந்து வந்தது. அடுத்த ஒரே வாரத்தில் விலை சரிவு நின்று, அதன்பிறகு ஏற்ற இறக்கத்தில் உள்ளது. ஆகஸ்ட் 27 ஆம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ. 6,800ஐ எட்டியது.
இன்று சென்னையில் (செப்டம்பர் 8, 2024) ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையான ரூ.6,680-க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.53,440-க்கு விற்பனையாகி வருகிறது. இன்று, 24 காரட் ஒரு கிராம் தூய தங்த்தின் விலை ரூ.7,135 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல 24 கார்ட் தங்கம் ஒரு சவரன் ரூ.57,080-க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த ஒரு வாரத்தின் விலையை ஒப்பிடும்போது தற்போது தங்கம் விலை வெகுவாகக் குறைந்துள்ளது.
விலை உயருமா? குறையுமா?: ஆனால், தங்கம் விலை தொடர்ந்து குறையுமா என்றால் அதற்கு வாய்ப்பில்லை என்கிறார்கள் வல்லுநர்கள். இந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் தங்கத்தின் விலை விண்ணைத் தொடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், தங்கம் விலை அடுத்த மாதம் முதல் 3 மாதங்களுக்கு உயர்வைச் சந்திக்கும் எனக் கூறப்படுகிறது.
தங்கம் விலை ஏற்ற இறக்கத்தின் பின்னணியில் பல காரணிகள் உள்ளன. உள்ளூர் பிரச்சனைகள் தொடங்கி உலகளாவிய சூழல் வரை தங்கம் விலை நிலவரத்தில் எதிரொலிக்கக்கூடும். அந்தவகையில், 3 முக்கிய காரணங்களால் அடுத்த 3 மாதங்களுக்கு தங்கம் விலையில் மிகப்பெரிய உயர்வு வரக்கூடும் எனக் கூறப்படுகிறது.
பண்டிகை சீசன்: இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்க உள்ளது. திருமணங்கள் இந்த மாதமும், கார்த்திகை மாதமும் அதிகமாக நடக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், நாடு முழுவதும் நகைகளுக்கான தேவை அதிகரித்து, அதன் விளைவாக தங்கத்தின் விலை உயரும். இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகமாகவே உள்ள நிலையில், தங்கத்தின் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய உச்சம் படைக்கக்கூடும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க பொருளாதாரத்தின் தாக்கம்: அமெரிக்காவில் அதிகரித்து வரும் மந்த நிலையை கருத்தில் கொண்டு, ஃபெடரல் ரிசர்வ் வங்கி அதன் வட்டி விகிதங்களை குறைக்கக்கூடும் எனத் தெரிகிறது. அமெரிக்காவின் பொருளாதார மந்தநிலைக்கு அங்கு நடைபெறும் அதிபர் தேர்தல்தான் காரணம். இந்த சூழலில் அமெரிக்க அரசு வட்டி விகிதங்களைக் குறைக்க அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு முடிவு வரும்போது தங்கத்தின் விலை உயரும் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருவதால், வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்கின்றன. அமெரிக்கா வட்டி விகிதங்களை இன்னும் குறைத்தால், டாலரின் மதிப்பு குறையும் என்று மற்ற நாடுகள் நம்புகின்றன. அந்த நிலை வரும் வரை அவர்கள் தங்கத்தை நோக்கி தங்கள் முதலீட்டை திருப்பி இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
போர்ச் சூழல்: உலகில் போர் ஏற்படும் நிலை உருவாகும் போதெல்லாம், தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கிறது. தற்போது, இஸ்ரேல் - ஹமாஸ், ரஷ்யா - உக்ரைன் உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் போர்ப் பதற்றம் உள்ளது. வரும் காலங்களில் நிலைமை மோசமாகும் பட்சத்தில் தங்கத்தின் விலை மேலும் உயரும் எனக் கூறப்படுகிறது.
போர் பதற்றம், அரசியல் ஸ்திரத்தன்மையின்மை காரணமாக, உலகளாவிய அளவில் விநியோகச் சங்கிலி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் தாக்கம் நிதிச் சந்தையிலும் தெரியும். முதலீட்டாளர்கள் தங்களுடைய ரிஸ்க்கைக் குறைக்க, தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரிக்கின்றனர். இதன் காரணமாக தங்கம் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications