சீக்கிரம் ராக்கெட்டில் ஏற போகுது தங்கம் விலை.. இன்னும் எவ்வளவு டைம் இருக்கு? ஆனந்த் சீனிவாசன் நறுக்
சென்னை: கடந்த சில காலமாகவே தங்கம் விலை மெல்லச் சரிந்தே வருகிறது. பட்ஜெட்டிற்கு பிறகு தங்கம் விலை பெரியளவில் அதிகரிக்கவே இல்லை. இதனால் நடுத்தர வர்க்கத்தினருக்குத் தங்கம் வாங்குவது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கிடையே தங்கம் தொடர்பாகப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டிற்கு பிறகு தங்கம் விலை தொடர்ந்து குறைந்தே வருகிறது. மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரியை நிர்மலா சீதாராமன் குறைத்திருந்தார்.

அதன் பிறகு பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து குறைந்தே வருகிறது. இடையில் சில நாட்கள் தங்கம் விலை அதிகரித்த நிலையில், நேற்றைய தினம் மீண்டும் தங்கம் விலை சரிந்தது. சென்னையில் நேற்றைய தினம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.70 குறைந்து ரூ.6400க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை: பொதுவாகக் கஷ்ட காலங்களில் தங்கம் தான் பொதுமக்களுக்குப் பெரியளவில் உதவி இருக்கிறது. இதனால் மக்கள் எப்போதும் தங்கத்திலேயே தொடர்ந்து முதலீடு செய்வார்கள். இந்தச் சூழலில் தங்கம் விலை இனி இதேபோலத் தான் இருக்கும். மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு குறைவு என்றெல்லாம் இணையத்தில் தகவல்கள் பரவின. இப்படி தங்கம் திடீரென தொடர்ந்து குறைந்து வருவது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்குப் பல கேள்விகள் எழுந்தன.
இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். தங்கம் இப்போது குறைந்தாலும் கூட வரும் காலங்களில் அது அதிகரிக்கவே செய்யும் என்று கூறிய அவர், ஏன் தங்கம் விலை அதிகரிக்கும் என்பதற்கான காரணத்தையும் விளக்கினார்.
ஆனந்த் சீனிவாசன்: இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் விலை குறைந்துள்ளது. எனவே அதை இடிஎஃப்களில் வாங்கலாம். அதேபோல கடைகளில் சென்றும் கூட நீங்கள் தங்கத்தை வாங்கலாம். தங்கம் இப்போது குறைந்தாலும் கூட அடுத்த 18 மாதங்களில் தங்கம் விலை நிச்சயம் அதிகரிக்கும்.
அதாவது தங்கம் இப்போது குறுகிய காலத்தில் குறைந்தாலும் கூட நீண்ட கால நோக்கில் அதிகரிக்கவே செய்யும். குறிப்பாக அமெரிக்காவில் அந்நாட்டின் மத்திய வங்கி, தனது வட்டி விகிதத்தைக் குறைத்தால், தங்கம் விலை ராக்கெட்டில் ஏறிவிடும். அப்போது அது புதிய உச்சம் தொடும்.
எது பாதுகாப்பானது: தற்போதுள்ள சூழலில் நீங்கள் பங்குச்சந்தையில் எவ்வளவு முதலீடு செய்கிறீர்களோ.. அதே அளவுக்குத் தங்கம் அல்லது கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும். அதுவே பாதுகாப்பானதாக இருக்கும்" என்று கூறினார்.
என்ன காரணம்: சர்வதேச அளவில் தங்கம் விலை என்பது அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதத்தைப் பொறுத்து மாறுபடும். அங்கே வட்டி விகிதம் உயர்ந்தால் சர்வதேச அளவில் தங்கம் விலை சரியும்.. அங்கே வட்டி குறைந்தால் தங்கம் விலை அதிகரிக்கும். இத்தனை காலம் அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகமாக இருந்ததாலேயே தங்கம் விலை பெரிதாக அதிகரிக்காமல் இருந்தது.
அமெரிக்க மத்திய வங்கியின் அடுத்த கூட்டம் வரும் செப். மாதம் நடைபெற இருக்கிறது. அதில் அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைக்கலாம் எனக் கூறப்படுகிறது. அப்படி வட்டி விகிதத்தை அமெரிக்க மத்திய வங்கி குறைக்கத் தொடங்கினால் தங்கம் விலை புதிய உச்சம் தொடும் என்பதே அவரது கருத்தாகும்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications