பொன்னுல போட்ட காசு காப்பாத்திருச்சு.. இந்தியர்களை லட்சாதிபதிகளாக மாற்றிய தங்கம்! இத்தனை டன் இருக்கா?
சென்னை: தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது. விலை உயர்ந்தாலும் தங்கம் வாங்கும் ஆர்வம் குறையாத இந்தியாவில், 62 சதவீத குடும்பங்கள் தங்கள் கையிலுள்ள தங்கத்தின் மதிப்பால் லட்சாதிபதிகளாக மாறியுள்ளனர். மேலும், இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் தங்கத்தின் கையிருப்பை விட, இந்திய குடும்பங்களிடம் இருக்கும் இந்தியர்களிடம் 28 மடங்கு அதிகமாக தங்கம் உள்ளது. இதன் மதிப்பு 190 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. கடந்த 23 ஆம் தேதி சவரனுக்கு ரூ.85,000-ஐ தாண்டி வரலாற்று உச்சத்தை தொட்ட தங்கம் விலை, அதன்பின் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. 26 ஆம் தேதியிலும் விலை மீண்டும் அதிகரித்தது.
நேற்று (செப்.29) காலை நிலவரப்படி கிராமுக்கு ரூ.60, சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,700க்கும், ஒரு சவரன் ரூ.85,600க்கும் விற்பனையாகியது. மாலையில் மீண்டும் விலை உயர்ந்து, ஒரு சவரன் ரூ.560 அதிகரித்து ரூ.86,160-க்கும், ஒரு கிராம் ரூ.70 அதிகரித்து ரூ.10,770-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை
இன்று (செப்.30) விலை மேலும் பாய்ந்து, சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.86,880 ஆகவும், கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.10,860 ஆகவும் விற்பனையாகி வருகிறது. தங்கத்தின் விலை இதே வேகத்தில் உயர்ந்தால், ரூ.90,000 என்ற உச்சவரம்பையும் மிக விரைவில் தொட்டுவிடும் என நிபுணர்கள் கணிக்கிறார்கள். இந்நிலையில், உலக தங்க கவுன்சிலின் தகவலின்படி, இந்திய ரிசர்வ் வங்கியிடம் தற்போது சுமார் 890 டன் தங்கம் கையிருப்பில் உள்ளது. ஆனால் பொதுமக்களிடம் இருக்கும் தங்கத்தின் அளவு சுமார் 25,000 டன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.190 லட்சம் கோடி ஆகும்.
இந்திய குடும்பங்களில் தங்கம்
2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "ICDU-360" சர்வே படி, இந்தியாவில் 87% குடும்பங்களில் தங்கம் உள்ளது. அப்போது ஒரு வீட்டில் 10 கிராம் (22 காரட்) தங்கம் இருந்தால் அதன் மதிப்பு வெறும் ரூ.28,560 மட்டுமே. ஆனால் இன்று அதே தங்கத்தின் மதிப்பு ரூ.1,07,700 ஆக உயர்ந்துள்ளது. தங்க கவுன்சில் தரவுகளின்படி, இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 62% குடும்பங்கள் தொடக்கநிலை நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவை. இவர்களில் பெரும்பாலானோரிடம் குறைந்தது ஒரு பவுன் தங்கம் இருந்ததால் அவர்கள் இப்போது தங்கத்தின் மதிப்பின் அடிப்படையில் லட்சாதிபதிகள் ஆகிவிட்டனர்.
கோடீஸ்வரர்கள்
125 பவுன் (சுமார் 1,000 கிராம்) தங்கம் வைத்திருந்த குடும்பங்கள் இன்று கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஏழை குடும்பங்களில் காதணிகள் அல்லது சிறிய தங்க ஆபரணங்கள் மட்டுமே இருந்தாலும், அதுவே இப்போது அவர்களுக்கு சிறந்த முதலீடாக மாறியுள்ளது. தங்கத்தின் விலை உயர்வால், ஏழைகள் லட்சாதிபதிகளாகவும், லட்சாதிபதிகள் கோடீஸ்வரர்களாகவும் உயர்ந்துள்ளனர்.
இந்திய தங்கம்
தங்கம் என்பது இந்தியர்களுக்கு வெறும் உலோகம் அல்ல; அது மரபின் அடையாளம், எதிர்கால பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையின் சின்னம். திருமணம் முதல் குழந்தை பிறப்பு வரை அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் தங்கம் ஒரு முக்கிய பங்காக இருந்து வருகிறது. அதனால் விலை எவ்வளவு உயர்ந்தாலும் தங்கம் வாங்கும் ஆர்வம் குறையாது என்பது உறுதி. தங்கம் விலை அடுத்த சில மாதங்களில் மேலும் உயரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால் விலை உயர்ந்தாலும், இந்திய குடும்பங்களின் தங்கம் மீதான நம்பிக்கை எந்த அளவிலும் குறையாது என்பது மட்டும் உறுதியான உண்மை.












Click it and Unblock the Notifications