"தங்கம் விலை குறைய ஒரு வாய்ப்புதான் இருக்கு!" உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன்! அது என்ன வழி தெரியுமா?
சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து, புதிய உச்சம் தொட்டு வருகிறது. இதற்கிடையே தங்கம் விலை குறைய ஒரே ஒரு வாய்ப்பு இருப்பதாகப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். மேலும், தங்கம் விலை இந்தளவுக்கு உயரவும் யார் காரணம் என்பதை அவர் விளக்கியுள்ளார். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கொரோனாவுக்கு பிறகும் கூட சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தங்கம் விலை கிராமுக்கு ரூ.5000- 5500 என்ற ரேஞ்சிலேயே இருந்தது. ஆனால், அதற்குப் பிறகு உயரத் தொடங்கிய தங்கம் விலை குறையவே இல்லை. இப்போதெல்லாம் ஒரு நாளுக்கு இரு முறை தங்கம் விலை மாற்றி அமைக்கும் ரேஞ்சுக்கு விலை உயர்ந்து வருகிறது. இன்று கூட தங்கம் விலை ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்தது. காலையில் சவரனுக்கு ரூ.800 உயர்ந்த நிலையில் பிற்பகலில் மேலும் ரூ.680 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,385-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆனந்த் சீனிவாசன்
இதற்கிடையே தங்கம் விலை உயர்வுக்கான காரணத்தைப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். மேலும், தங்கம் விலை குறைய இருக்கும் வாய்ப்பு குறித்தும் அது நடக்குமா என்பது குறித்தும் சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் விலை ஏறிக் கொண்டே இருக்கிறது. சர்வதேச சந்தையில் கோல்ட் ப்யூச்சர்ஸ் 4000 டாலரை தாண்டிவிட்டது. ஸ்பாட் தங்கம் கூட 3975ஐ தாண்டிவிட்டது. அதுவும் சீக்கிரமே 4000 டாலரை தொட்டுவிடும்.
இதற்கு இரு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று அமெரிக்க அரசு ஷட் டவுன் ஆகியுள்ளது. அந்நாட்டு அரசிடம் செலவழிக்கப் பணம் இல்லை. மறுபுறம் பிரான்ஸில் அரசு கவிழ்ந்துவிட்டது. அங்கு இப்போது அதிபரா இருக்கும் மக்ரோன் பதவி ரப்பர் ஸ்டாம்ப் போல போய்விட்டது. ஒரே மாதத்தில் நேபாளத்தில் இரு அரசுகள் கவிழ்ந்துவிட்டன. அங்குத் தீவிர வலதுசாரி கட்சி ஆட்சியைப் பிடித்துவிடுமோ என்ற அச்சம் மக்களிடையே இருக்கிறது. இவை எல்லாம் தங்கம் விலை அதிகரிக்கும் வாய்ப்பையே ஏற்படுத்துகிறது.
சரியும் டாலர் மதிப்பு
அமெரிக்கா ஷட் டவுன் ஆகியுள்ளதால் இதுவரை எந்தவொரு டேட்டாவும் வரவில்லை. இந்தச் சூழலில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்தால் தங்கம் விலை இன்னும் உயரும். உலகெங்கும் பல நிச்சயமற்ற சூழல் இருப்பதால் தங்கம் விலை உயர வாய்ப்பு அதிகம். தங்கம் இந்தளவுக்கு ஏறுவது வருத்தமாக இருப்பதாகப் பல சர்வதேச வல்லுநர்கள் கூறுகிறார்கள். அதாவது தங்கம் இந்தளவுக்கு உயர்வது, டாலர் மதிப்பு சரிந்து கொண்டே போவதையே காட்டுகிறது. இதனால் அவர்கள் வருத்தப்படுகிறார்கள்.
இந்தியாவிலும் எதிரொலி
சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்வது இந்தியாவிலும் எதிரொலிக்கிறது. இந்தியாவில் இப்போது ஒரு கிராம் தங்கத்திற்கு ஜிஎஸ்டி சேர்த்தாலே ரூ.11.500 வந்துவிடும். 18 கேரட் தங்கத்திலும் ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி, சேதாரம் சேர்த்தால் ரூ.10 ஆயிரத்தைத் தொட்டுவிடும். தங்கம் விலை இந்தளவுக்குத் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. மிக சிறந்த ஒரு முதலீடாக மாறியுள்ளது.
வெள்ளி இந்தளவுக்கு உயர்ந்தாலும் கூட இன்னும் அது தனது பழைய உச்சத்தை முறியடிக்கவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஹண்ட் சகோதரர்கள் இப்படித் தான் வெள்ளியை வாங்கி குவித்தனர். இருப்பினும், ஒரு கட்டத்தில் அது வெடித்துவிட்டது. இன்னும் வெள்ளி அந்த நிலையை அடையவில்லை.
குறைய ஒரே வழி தான் இருக்கு
வெள்ளி எப்போதும் இதுபோல தாறுமாறாக ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கும். அதேநேரம் தங்கம் நிலையாக நிற்கும். தங்கம் விலை குறைய ஒரே வாய்ப்பு தான் இருக்கிறது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைப் படுவேகமாக அதிகரித்தால் மட்டுமே தங்கம் விலை குறையும்.
ஆனால், அப்படி வட்டி விகிதத்தை உயர்த்தினால் அமெரிக்கப் பொருளாதாரம் மிக மோசாகப் பாதிக்கப்படும். தற்போதுள்ள சூழலில் எந்தவொரு அமெரிக்க அதிபரும் வட்டி விகிதத்தை அதிகரிக்க விட மாட்டார்கள். சொல்லப்போனால் டிரம்ப் வட்டி விகிதத்தைக் குறைக்கவே சொல்கிறார். டிரம்ப் இருக்கும் வரை தங்கம் விலை உயரவே செய்யும்" என்றார்.












Click it and Unblock the Notifications