தங்க முட்டையிடும் வாத்து.. பல கோடி வருவாய்.. தாம்பரம் -செங்கல்பட்டு 4வது ரயில் பாதை ஒப்புதல் ஏன்?
சென்னை: ரூ.757.18 கோடியில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயான 4-வது ரயில் பாதை திட்டத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்திருப்பதன் பின்னணி பற்றி பார்ப்போம். தாம்பரம்- செங்கல்பட்டு இடையே உள்ள பாதை என்பது தென் மாவட்டங்களுக்கு செல்லும் பிரதான ரயில் பாதையாகும். இதில் வெறும் 3 பாதைகள் உள்ளன.. இதில் நான்காவது பாதை அமைக்கப்பட்டால் புறநகர் மின்சார ரயில் சேவை அதிகரிக்கும். அதேபோல் சரக்கு ரயில் சேவையால் ரயில்வேக்கு மிகப்பெரிய அளவில் வரி வருவாய் கிடைக்கும் என்பதால் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையில் நான்கு பக்கமும் ரயில் பாதைகள் உள்ளன. இதில் அரக்கோணம் வழித்தடம் என்பது வடமாநிலங்கள், கர்நாடகா, கோவை, கேரளா போன்ற மாநிலங்களுக்கு செல்லும் வழித்தடம் ஆகும். இன்னொரு பாதை, கும்மிடிப்பூண்டி ரயில் வழித்தடம்.. இது ஆந்திரா மற்றும் டெல்லி உள்பட பல்வேறு வட மாநிலங்களுக்கு செல்லும் பாதையாகும்.

மிக பிரதானமான வழித்தடம்
அடுத்ததாக சென்னை-செங்கல்பட்டு ரயில் பாதை.. இதுதான் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பிரதான ரயில் பாதையாக இருக்கிறது. எழும்பூரில் இருந்து செல்லும் பெரும்பாலான தென் மாவட்ட ரயில்கள் இப்பாதை வழியே சென்று வருகிறது. மற்ற வழித்தடங்களை விட இந்த வழித்தடம் தான் ரயில் வழித்தடங்களில் முக்கியமானது. ஏனெனில் சென்னை மாநகரம் மற்ற பகுதிகளை விடவும், செங்கல்பட்டு வழித்தடத்தில் தான் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. சென்னை மாநகரம் செங்கல்பட்டு வரையிலுமே வளர்ந்து நிற்கிறது. இந்த வழித்தடம் தான் மொத்த தமிழ்நாட்டிற்குமான பிரதான ரயில் வழித்தடமாக இருக்கிறது.
300 மின்சார ரயில் சேவை
கடற்கரை -தாம்பரம்- செங்கல்பட்டு ரயில் பாதை பாதை வழியே 60-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும், 300-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக்கப்படுகிறது. மின்சார ரயில் சேவையை பொறுத்தவரையில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சென்று வருகிறார்கள். இவ்வளவு பிஸியான இந்த வழித்தடத்தில் 3 பாதைகள் மட்டுமே உள்ளன. கூடுதல் பாதைகள் இல்லாததால் தென் மாவட்டங்களுக்கு இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்க முடியாத நிலை இருக்கிறது.
ரயில்வே விருப்பம்
இதுபோக தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை போன்ற விடுமுறை காலங்களில் சிறப்பு ரயில்கள் விடப்பட்டாலும் குறைந்த அளவில் விடும் நிலையே இன்று வரை தொடர்கிறது. எனவே, தாம்பரம்-செங்கல்பட்டு 4-வது ரயில் பாதை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டுமென பயணிகள் மத்தியில் கோரிக்கை வைத்து வந்தனர். 4-வது புதிய பாதை அமைக்கும் திட்டத்தை உடனே செயல்படுத்த தமிழக அரசு விரும்பியது. எனினும் இந்த திட்டத்தை முழுமையாக ரயில்வேயின் சொந்த நிதியிலேயே செயல்படுத்தப் போவதாக ரயில்வே விரும்பியது. ஏனெனில் சென்னை செங்கல்பட்டு வழித்தடம் என்பது, தெற்கு ரயில்வேக்கு வருமானத்தை அள்ளித்தரும் வழித்தடம் ஆகும். இந்த திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் தெற்கு ரயில்வே வழங்கியது.
தாம்பரம்-செங்கல்பட்டு ரயில் பாதைக்கு ஒப்புதல்
இந்த நிலையில், தாம்பரம்-செங்கல்பட்டு இடையிலான 4-வது ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஒப்புதல் அளித்தார். இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "தாம்பரம்-செங்கல்பட்டு இடையிலான 30.2 கிலோ மீட்டர் தூரத்திலான 4-வது ரயில் பாதை திட்டத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த திட்டத்தின் செலவு ரூ.757.18 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. சென்னை கடற்கரை முதல் கன்னியாகுமரி வரையிலான வழித்தடத்தில் தாம்பரம்-செங்கல்பட்டு பிரதான பாதை ஆகும். மின்சார ரயில்களும், எக்ஸ்பிரஸ் ரயில்களும் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. அதிக அளவிலான பயணிகள் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகிறார்கள்.
புதிய ரயில் பாதையால் ரூ.157 கோடி வருவாய்
அந்த வகையில், தற்போது இந்த வழித்தடத்தில் பயணிகளின் பயன்பாடு 87 சதவீதமாக இருக்கிறது. புதிய பாதை செயல்படுத்தப்படும் போது அது 136 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், பயணிகளின் கூட்ட நெரிசலும் குறையும். செங்கல்பட்டு வரையில் மின்சார ரயில் சேவையை நீட்டிக்கவும் இது உதவும். தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் அதிகரிக்கும் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இந்த திட்டம் வரப்பிரசாதமாக அமையும். மேலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு பெரிதும் பயனளிக்கும். அதேபோல், இந்த வழித்தடத்தில் ஆண்டுக்கு ரூ.157 கோடி அளவில் வருவாய் ஈட்டும் வகையில் சரக்கு ரயில் போக்குவரத்தும் கையாளப்படும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ரயில்வே சரக்கு முனையம்
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பினை பார்க்கும் போது, செங்கல்பட்டு-தாம்பரம் வழித்தடத்தில் நான்காவது பாதை உருவானால், சரக்கு ரயில்கள் எளிதாக வந்து செல்லும். அத்துடன் சரக்கு முனையமும் அமைக்கப்படும். இந்த சரக்கு முனையத்தால் ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.157 கோடி அளவில் வருவாய் கிடைக்கும். கூடுவாஞ்சேரி காட்டாங்குளத்தூர் இடையே சரக்கு ரயில் முனையம் அமைக்கும் திட்டமும் ரயில்வேக்கு இருக்கிறது. இந்த பாதையும், சரக்கு முனையமும் அமையும் போது, சுற்றுவட்டாரத்தில் உள்ள நிறுவனங்களின் சரக்குகளை எளிதாக ரயில்வே கையாள முடியும். இதன் மூலம் ரயில்வேக்கு வருவாய் பெரிய அளவில் உயரும்.
எப்படி அமைக்கப்படும்
அதேபோல் ரயில் சேவைகளையும் அதிகரிக்க முடியும். எப்படி பார்த்தாலும், ரயில்வேக்கு தாம்பரம் செங்கல்பட்டு வழித்தடம் மிகப்பெரிய லாபம் என்பதால், ரயில்வே இந்த வழித்தடத்தில் நான்காவது பாதை திட்டத்தை உடனே செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த நான்காவது பாதை என்பது ஜிஎஸ்டி சாலையை ஒட்டி ரயில் பாதையின் கிழக்கு பக்கத்தில் தான் அமைய உள்ளது. ஏனெனில் மேற்கு பக்கத்தில் போதிய இடம் இல்லை.. அதேபோல் அந்த பகுதிகளில் ஏராளமான வீடுகள் இருப்பதால் நிலத்தை கையகப்படுத்துவது சவாலானது. எனவே தான் இருபக்கமும் தடுப்பு சுவர்களுடன் நான்காவது பாதை 160 கிமீ வேகத்தில் செல்லும் வகையில், ஜிஎஸ்டி சாலையை ஒட்டி அமைக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications