பஸ் வசதிகூட இல்லாத கிராமத்து பொண்ணு நான்.. அரசு பஸ் விட வேண்டும்.. நெகிழ வைக்கும் கோமதி
அனைவருக்கும் பஸ் வசதி தேவை என கோமதி மாரிமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video
சென்னை: "பஸ் வசதிகூட இல்லாத கிராமத்துல இருந்துதான் நான் வந்திருக்கேன்.. அதனால எல்லாருக்குமே பஸ் வசதி செய்து தரணும்" என்று வீராங்கனை கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
3-வது சர்வதேச ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றது. இதில் 800 மீட்டர் தடகளப் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து, தங்கம் வென்று நாட்டிற்கு சிறப்பை தேடி தந்துள்ளார்.
இதனால் அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவர் இன்று சென்னை திரும்பினார். அப்போது ஏர்போர்ட்டில் கோமதிக்கு உற்சாக வரவேற்பு தரப்பட்டது.

கடின உழைப்பு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோமதி, "கடினமான உழைப்பினாலதான் எனக்கு இந்த வெற்றி கிடைத்தது. நான் இப்போது பெங்களூரில் வேலை பார்த்து வருகிறேன்.

வாழ்த்து
எனக்கு அங்க வேலை பார்ப்பதில் பெரிசா விருப்பம் இல்லை. தமிழ்நாட்டில் இருக்கணும்னு எனக்கு ஆசை. இங்க வேலை செய்து தங்கம் வெல்லணும். இதுதான் என் விருப்பம். முதலமைச்சர் எனக்கு வாழ்த்து சொன்னது மகிழ்ச்சியா இருக்கு.

விளையாட்டு மைதானம்
என்னை போல ஏழை மாணவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்க வேண்டும். திறமையானவர்களை ஊக்குவிக்க வேண்டும். பஸ் வசதி கூட இல்லாத கிராமத்தில் இருந்து தான் நான் வந்திருக்கேன். இதுபோன்ற பஸ், சாப்பாடு, மைதானம் என விளையாட்டு பயிற்சி செய்ய அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

ஒலிம்பிக் பதக்கம்
நான் ரொம்ப கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்திருக்கேன். இனி வரும் தலைமுறையினர் அப்படி கஷ்டப்படக் கூடாது. தமிழக அரசு மட்டும் எனக்கு வேண்டிய உதவிகளைச் செய்தால் நான் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லவும் முழு மூச்சுடன் முயல்வேன்" என்றார்.












Click it and Unblock the Notifications