"சபாஷ் தமிழ்நாடு அரசு".. ஆர்எஸ்எஸ் வெறுப்பரசியல்.. பேரணிக்கு தடைகோர இதுதான் காரணம்: CPM பாலகிருஷ்ணன்
ஆர்எஸ்எஸ் பேரணி தடைக்கு சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் செய்ததை பாலகிருஷ்ணன் வரவேற்றுள்ளார்
சென்னை: வெறுப்பு அரசியலையே தங்களது திட்டமாக வைத்துள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கடந்த கால/தற்போதைய செயல்பாடுகளை கணக்கில் கொண்டுதான் அவர்களின் பேரணிக்கு அனுமதி கூடாது என்கிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த சென்னை ஹைகோர்ட், அனுமதி கொடுத்த நிலையில், சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்ததற்கு பாலகிருஷ்ணன் வரவேற்பும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி தினத்தில் ஆர்எஸ்எஸ் சார்பாக பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதாவது, தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு பேரணி நடத்த திட்டமிடப்பட்டது.
ஆனால், திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன் இந்த பேரணிக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார்... மேலும், ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தும் காந்தி ஜெயந்தி அன்று, சமூக நல்லிணக்க பேரணி நடத்தப்படும் என அறிவித்து, சமூகநீதி அரசியல் பேசும் இயக்கங்கள், அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

ஹைகோர்ட்
அதைத் தொடர்ந்து கலவரம் நடக்க இருந்த சூழலால் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு போலீஸ்அனுமதி மறுத்தது...இதையடுத்து ஹைகோர்ட்டில் ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், நிபந்தனைகளுக்கு உட்பட்டு பேரணி நடத்திக்கொள்ள உத்தரவிட்டது... ஆனால் பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதால் கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 3 இடங்களை தவிர, மற்ற இடங்களுக்கு போலீஸார் மறுபடியும் அனுமதி மறுத்ததால் ஹைகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு தொடர்ந்து நடந்து வந்தது.

அந்த 3 நாட்கள்
இறுதியில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டதுடன், பேரணிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் 3 தேதிகளில் ஒரு தேதியில் பேரணி நடத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.. எனினும், இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு, சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்தது... அந்த மனுவில், "சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை இருப்பதால் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என்றும், அதனால் ஹைகோர்ட் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்" என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பாலகிருஷ்ணன்
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தமிழ்மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஒரு ட்விட்டையும் பதிவிட்டுள்ளார்.. அதில், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு உயர்நீதிமன்றம் விதித்திருந்த கட்டுப்பாடுகளை நீக்கிய இரண்டு நீதிபதிகள் அமர்வின் உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவேண்டும் என சி.பி.ஐ(எம்) கோரியது. தற்போது தமிழ் நாடு அரசு மேல்முறையீடு செய்திருப்பது வரவேற்புக்குரியதாகும்.

ரொம்ப கரெக்ட்
மக்களிடையே வெறுப்பினை பரப்பி, மோதலை உருவாக்கும் சக்திகளை ஜனநாயக இயக்கங்களைப் போல கருத முடியாது. வெறுப்பு அரசியலையே தனது திட்டமாக வைத்துள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கடந்த கால/தற்போதைய செயல்பாடுகளை கணக்கில் கொண்டுதான் அவர்களின் பேரணிக்கு அனுமதி கூடாது என்கிறோம். இவ்விசயத்தில், குறிப்பாக சட்டம் ஒழுங்கு சார்ந்த விசயங்களை உயர்நீதிமன்றம் கவனத்தில் எடுக்க தவறிவிட்டது. எனவே, உச்சநீதிமன்றத்தில் தமிழ் நாடு அரசாங்கம் மேல்முறையீடு செய்திருப்பது சரியானது. பாராட்டுக்குரியது என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications