அம்மா தாய்மாரே ஆபத்தில் விடாமாட்டேன்,.. இதுதான் சூப்பர் சாதனை.. எழும்பூர் அரசு மருத்துவமனை அசத்தல்!
சென்னை: எழும்பூர் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 64 பெண்களுக்கு பிரசவம் பார்த்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மருத்துவமனை இயக்குனர் விஜயா தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் அரசு தாய் சேய் நல மருத்துவமனை 1,075 படுக்கைகளுடன் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனை தான் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பிரசவத்திற்கு மிக முக்கியமான மருத்துவமனை.

அவசர சிகிச்சைக்காக மட்டுமே தினசரி ஆயிரக்கணக்கான தாய்மார்கள் வருகிறார்கள். இங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 64 தாய்மார்களுக்கு பிரசவம் பார்த்து மருத்துவர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள்
இது தொடர்பாக சென்னை எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனை இயக்குனர் விஜயா கூறுகையில், சென்னை எழும்பூர் மருத்துவமனையில் தினமும் 50 பிரசவம் நடைபெறுவது வழக்கமாகும். இந்நிலையில் நேற்று முன்தினம் (27.10.2020) நள்ளிரவு 12 மணி முதல் நேற்று ( 28.10.2020) நள்ளிரவு 12மணி வரை 24 மணி நேரத்தில் 64 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடத்தி சாதனை செய்துள்ளோம். எந்த சிக்கல்களும் இல்லாமல் நடந்தது. சராசரியாக நாளொன்றுக்கு 50 பேர் வரையிலும், மாதம் ஒன்றுக்கு 1500 பேர் வரையும், ஆண்டுக்கு 18 ஆயிரம் பேர் வரையிலும் இங்கு பிரசவம் நடைபெறுகிறது.
மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைத்து மருத்துவ பணியாளர்களும் தொடர்ந்து தயாராக இருக்கிறாரகள். நேற்று நடைபெற்ற பிரசவத்தில் 24 பெண் குழந்தைகளும், 40 ஆண் குழந்தைகளும் பிறந்தது. இதில் ஒருவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது. 64 பிரசவங்களில் 34 அறுவை சிகிச்சை முறையிலும், மற்றவை சுகப்பிரசவமாகவும் நடைபெற்றது. தாய்மார்களும், குழந்தைகளும் ஆரோக்கியமாக நலமுடன் உள்ளார்கள். கொரோனா பாதித்த 4 தாய்மார்களுக்கும் எவ்வித சிக்கல்களும் இல்லாமல் குழந்தையை பெற்றுள்ளனர்" இவ்வாறு மருத்துவர் விஜயா கூறினார்.












Click it and Unblock the Notifications