ஜாக்பாட்! பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ரூ.10,000 எக்ஸ்ட்ரா.. ஊதியம் ரூ.2,500ஆக உயர்த்தி அரசாணை!
சென்னை: அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.2500 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பகுதிநேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ.15,000 ஆக உயர்ந்துள்ளது. அதோடு மே மாதத்திற்கு மட்டும் சிறப்பு உதவித் தொகையாக ரூ.10,000 வழங்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பகுதிநேர ஆசியர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வரும் நிலையில், சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழலில் பகுதி நேர ஆசிரியர்களின் சம்பள உயர்வு குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, தையல், ஓவியம், இசை உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். வாரத்தில் 3 அரை நாட்கள் பணியாற்றும் அவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ.12,500 வழங்கப்படுகிறது. பணி நிரந்தரம் கோரி அவர்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.
சமீபத்தில் அவர்கள் தொடர் போராட்டம் நடத்தியபோது, 'தொகுப்பூதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும். கோடைவிடுமுறையான மே மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்' என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்தார். ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) சிறப்பு ஆசிரியர் பணி நியமனத்துக்கு தேர்வு நடத்தும்போது, பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு பணிக் காலத்துக்கு ஏற்ப குறிப்பிட்ட போனஸ் மதிப்பெண் அளிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.
இந்நிலையில், தொகுப்பூதியம் உயர்வு மற்றும் மே மாத சிறப்பு உதவித்தொகை தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் சட்டசபை தேர்தல் வரவிருக்கும் நிலையில் பகுதி நேர ஆசிரியர்களின் மனக்குறையைப் போக்கும் வகையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்ததன்படி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் பணிபுரியும் 11,773 பகுதிநேர பயிற்றுநர்களுக்கு 01.01.2026 முதல் தொகுப்பூதியத்தினை ரூ.12,500 லிருந்து ரூ.15,000 என 11 மாதத்திற்கு (மே மாதம் நீங்கலாக) ரூ.2500/- உயர்த்தி வழங்கி வழங்கப்படுகிறது.
மேலும் மே மாதத்திற்கு மட்டும் ரூ.10,000 சிறப்பு உதவித்தொகையாக வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அவ்வாறு உயர்த்துவதால் ஆண்டொன்றிற்கு தொடர் ரூ.44,14,87,500/-ஐ (ரூபாய் நாற்பத்து நான்கு கோடியே பதினான்கு லட்சத்து எண்பத்தேழாயிரத்து ஐந்நூறு மட்டும்) (11773x2500x11 மாதம் = 32,37,57,500/-செலவினமாக 11,77,30,000/- (11773x10000x1 மாதம்) ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதில், நடப்பாண்டிற்கு ஜனவரி 2026 முதல் மார்ச் 2026 முடிய மூன்று மாதங்களுக்கு ரூ.8,82,97,500/- (ரூபாய் எட்டு கோடியே எண்பத்தி இரண்டு லட்சத்து தொண்ணூத்தேழாயிரத்து ஐந்நூறு மட்டும்) நிதி விடுவிக்கப்படுகிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications