குரூப் 4 தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
சென்னை: குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலை வரும் ஜனவரி 8ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என டிஎன்பிஎஸ்சிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த கண்மணி, கீதா ஆகியோர் கடந்த அக்டோபர் மாதம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தாவது: தமிழ்நாட்டில் கடந்த 2022 மார்ச் 30ல் குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதில் மொத்தம் 7301 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டு ஜூலை 24ல் எழுத்து தேர்வு நடந்து முடிந்தது. 22 லட்சம் பேர் விண்ணப்பித்து 18 லட்சம் பேர் எழுதி இருந்தார்கள்,. இதன் பின் காலியிடங்கள் எண்ணிக்கை 10,117 ஆக அதிகரித்து அரசு உத்தரவிட்டது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச்சில் வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலில் எங்கள் பெயர் இல்லை. நாங்கள் 255 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது.
குரூப் 4 தேர்வு விடைத்தாள் நகல் (ஓ.எம்.ஆர்.,) மோசடியும், குழப்பமும் நடந்திருக்கிறது.. எங்களுடைய 'ஆன்சர் கீ' நகல் வழங்க வேண்டும். அதுவரை எங்களுக்குரிய பணியிடங்களை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்தனர்.
இம்மனு நீதிபதி உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி விஜயகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி 'குரூப் 4 தேர்வுக்கான இறுதி 'ஆன்சர் கீ' வெளியிடப்பட்டதா' என்று அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பினார். மேலும் அவ்வாறு வெளியிடவில்லை என்றால் ஏன் வெளியிடவில்லை. இறுதி செய்யப்பட்ட 'ஆன்சர் கீ' உடன் வெளியிட வேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டதற்கான அறிக்கையை அக்டோபர் 11ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றியது குறித்து டி.என்.பி.எஸ்.சி., செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வழக்கை ஒத்திவைத்திருந்தார்.
இதனிடையே வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்களான மதுரையை சேர்ந்த கண்மணி, கீதா உள்ளிட்டோர் தரப்பில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதில் எங்களுக்கு உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கடந்த மாதம் இறுதி விடைத்தாள் நகல் வழங்கப்பட்டது. இதனை ஆய்வு செய்தபோது, கண்மணி 169 கேள்விகளுக்கு சரியாக பதிலளித்து 253.50 மதிப்பெண் பெற்றிருந்தார். ஆனால், முதலில் வெளியிட்ட தேர்வு முடிவுகளில், குறைந்தபட்ச மதிப்பெண் பெறாததால் அவர் தகுதி பெறவில்லை என்று கூறப்பட்டு உள்ளது. இதனால் எங்களைப்போன்ற பலர் பணி நியமன பட்டியலில் இடம் பெறவில்லை.
பணி நியமனம் பெற தேவையான மதிப்பெண்களை பெற்றுள்ளதால் வக்கீல் கமிஷனரை நியமித்து எங்களது விடைத்தாளையும், இறுதி விடை நகலையும் ஒப்பிட்டு சரியான மதிப்பெண் வழங்க வேண்டும். எங்களுக்கு பணி நியமனத்துக்கான வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள்.
இதையடுத்து நீதிபதி விஜயகுமார் முன்பு இவர்கள் கோரிக்கை விசாரிக்கப்பட்டது. அப்போது, மனுதாரர்களுக்கு ஓ.எம்.ஆர். நகல் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது என்று டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, குரூப்4 பணியிடங்களுக்கு தேர்வான நபர்களின் பட்டியலை வருகிற ஜனவரி 8ந் தேதிக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும். மனுதாரர்களை விட குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் தேர்ச்சி பட்டியலில் இருந்தால் மனுதாரர்கள் நீதிமன்றத்தை நாடலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி விஜயகுமார் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.












Click it and Unblock the Notifications