ரயில் பயணிகளுக்கு பெரிய நிம்மதி.. சென்னையில் இன்று முதல் 3 புதிய மின்சார ரயில்கள்.. ரூட், டைமிங் இதோ
சென்னை: சென்னையில் மூன்று வழித்தடங்களில் இன்று புதிதாக ரயில் சேவைகள் தொடங்கப்படுகிறது. ஆவடி - சென்னை சென்டிரல், சென்டிரல் - திருவள்ளூருர் மற்றும் திருவள்ளூர் - சென்டிரல் என 3 வழித்தடங்களில் புதிதாக ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது. இதனால் சென்னை புறநகர் ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் புறநகர் ரயில்கள் போக்குவரத்து இன்றியமையாததாக உள்ளது. சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு ரூட், சென்னை கடற்கரை - வேளச்சேரி, சென்னை கடற்கரை - திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் மற்றும் சென்னை கடற்கரை - பட்டாபிராம் என மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மின்சார ரயில் சேவை: இதில் மிகவும் முக்கிய வழித்தடம் எதுவென்றால் சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடம் தான். தினமும் லட்சக்கணக்கான பயணிகள் இந்த மின்சார ரயில்களில் பயணம் செய்கிறார்கள். சராசரியாக 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் இந்த ரூட்டில் இயக்கப்படுவது வழக்கம். ஒரு சில நிமிடங்களில் ரயில் தாமதம் ஆனால் கூட ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதிவிடும்.
3 வழித்தடங்களில்: ரயில்கள் சில மணி நேரம் இயங்காவிட்டால் மொத்த சென்னையே ஸ்தம்பித்துவிடும் அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடும். சென்னை மின்சார ரயில்களை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 600க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இதில் தினமும் 8 லட்சம் பயணிகள் வரை பயணிக்கின்றனர். ரயில்வேயும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறது.
புதிய ரயில் சேவைகளை தொடங்குவது, ரயில் சேவைகளை நீட்டிப்பது, பராமரிப்பு பணிகள் என ரயில்வே பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அந்த வகையில் 3 வழித்தடங்களில் இன்று முதல் புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக சென்னை கோட்ட தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் 2 ரயில் சேவைகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
புதிய மின்சார ரயில்கள்: இன்று முதல் 3 புதிய ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது.
* ஆவடி முதல் சென்னை சென்டிரலுக்கு ஒரு மின்சார ரயில் காலை 9.50 மணிக்கு இயக்கப்படுகிறது.
* சென்டிரலில் இருந்து திருவள்ளூருக்கு காலை 10.40 மணிக்கு ஒரு மின்சார ரயில் இயக்கப்படுகிறது.
* திருவள்ளூரில் இருந்து சென்டிரலுக்கு மாலை 3.50 மணிக்கு ஒரு மின்சார ரயில் என மொத்தம் 3 புதிய மின்சார ரயில் சேவைகள் இன்று முதல் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
நீட்டிக்கப்பட்ட ரயில் சேவைகள்: இதேபோன்று சில மின்சார ரயில்கள் நீட்டிக்கபட்டுள்ளது. அதன்படி,
* சென்டிரல் - கும்மிடிப்பூண்டிக்கு நண்பகல் 12.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்று முதல் சூளூர்பேட்டை வரை நீட்டிக்கப்படுகிறது.
* கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும்.












Click it and Unblock the Notifications