குட் நியூஸ்.. இன்று இரவே வானிலையில் நடக்க போகும் "கம்பேக்".. வல்லுனர்கள் தந்த முக்கிய அப்டேட்!
சென்னை: சென்னை வானிலையில் இன்று என்ன நடக்கும், மற்ற மாவட்டங்களில் வானிலை எப்படி இருக்கும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு அப்டேட் வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமாக பெய்து வருகிறது. வடக்கு மாவட்டங்களில் பெய்த கனமழை தற்போது தென் மாவட்டங்களை நோக்கி நகர்ந்து உள்ளது.
அடுத்த சில நாட்களில் வடக்கு மாவட்டங்களில் கனமழை தொடரும். அதன்பின் புதிதாக உருவாக போகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு முழுக்க பரவலாக மழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வானிலை
இந்த நிலையில் இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாளை முதல் 2ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புறநகர் இரவு நேரத்தில் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் நிலவும். அதேபோல் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

சென்னை நிலை என்ன?
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் காலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் உருவானது. இது கனமழையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், பெரிதாக மழையை கொடுக்காமல் மறைந்து உள்ளது. இது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆகும். முதலில் இது வடக்கு சென்னையை நோக்கி செல்லுமா அல்லது டெல்டாவிற்கு செல்லுமா என்ற குழப்பம் இருந்தது. அதன்பின் வறண்ட காற்று காரணமாக இது வலிமை அடைவதில் சிக்கல் இருந்தது. வறண்ட காற்று இந்த தாழ்வு பகுதியை வலிமை அடைய விடாமல் தடுத்தது. பெரும் போராட்டத்திற்கு பின்புதான் இது தாழ்வு மண்டலமாகவே மாறியது. இதனால் பெரிதாக மழை பெய்யாத நிலையில் சென்னையில் மழை அளவு குறைந்து உள்ளது.

வானிலை
இந்த நிலையில், சென்னை வானிலையில் இன்று என்ன நடக்கும், மற்ற மாவட்டங்களில் வானிலை எப்படி இருக்கும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு அப்டேட் வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் தென் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் கனமழை பெய்யும். மலையோர மாவட்டங்களில் நல்ல கனமழை பெய்யும். அதேபோல் கேரளாவை ஒட்டி இருக்கும் பகுதிகளிலும் கனமழை பெய்யும். வடக்கு தமிழ்நாட்டில் வானிலை வறண்டு காணப்படும். சென்னையிலும் வானிலை வறண்டு இருக்கும். ஆனாலும் நல்ல செய்தி என்னவென்றால் கிழக்கு காற்று இன்று இரவில் இருந்து மீண்டும் வர உள்ளது.

சென்னை ரெயின்ஸ்
தென் தமிழ்நாட்டில் கனமழை பெய்வதற்கான சாதகமான வானிலை மாடல்கள் நிலவுகின்றன. மலையை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் தீவிர மழை பெய்வதற்கான சூழ்நிலை நிலவுகிறது, என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒருநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டு உள்ளது. அதிகாலையில் இருந்து பெய்யும் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications