நெல்லையில் பட்டியல் இன இளைஞர்கள் மீது சிறுநீர் கழிப்பு.. கைதான 6 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
சென்னை: நெல்லையில் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்களை கஞ்சா போதையில் 6 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர்கள் 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நெல்லை அருகே மணிமூர்த்தீஸ்வரம் ஆற்றுப் படுகையில் கடந்த 30ஆம் தேதி கஞ்சா போதையில் பட்டியலின இளைஞர்களை ஒரு கும்பல் வழிமறித்து தாக்கியதுது. மேலும் அவர்களின் சாதியை கேட்டு மிரட்டி நிர்வாணப்படுத்தியதுடன் அவர்கள் மீது சிறுநீர் கழித்து அவமதித்ததாகவும் அவர்களுடைய செல்போனை பறித்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான புகாரின் பேரில் பொன்மணி, ராமர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை தச்சநல்லூர் மணிமுத்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராஜ் மகன் மனோஜ்குமார். இவரும் அதே பகுதியை சேர்ந்த சேகர் மகன் மாரியப்பனும் தொழிலாளர்கள். இவர்கள் சம்பவத்தன்று மாலை வேலையை முடித்துவிட்டு மணிமுத்தீஸ்வரம் ஆற்றுப்பகுதியில் குளிக்கச் சென்றனர்.
அப்போது அங்கு வந்த சிலர் இளைஞர்களை வழிமறித்து தாக்கியதுடன் அவர்களிடம் ஜாதியை கேட்டு மிரட்டி நிர்வாணப்படுத்தியதுடன் அவர்கள் மீது சிறுநீர் கழித்து அவமதித்ததாக சொல்லப்படுகிறது. நள்ளிரவில் அவர்களிடம் இருந்து தப்பிய மனோஜ்குமார், மாரியப்பன் ஆகியோர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து புகாரின் பேரில் தச்சநல்லூர் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் தாழையூத்து ராஜவல்லிபுரத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் பொன்மணி (வயது 25), மணக்காடு பகுதியை சேர்ந்த ராமர் மகன் ஆயிரம் (19), சங்கரபாண்டியன் மகன் நல்லமுத்து (21), பாலகிருஷ்ணன் மகன் ராமர் (22), மாரிமுத்து மகன் சிவா (22) ஆகியோர் தொழிலாளர்களை தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசாா் 6 பேரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில், கைதான 6 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பாக போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
"திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர், மணிமூர்த்தீஸ்வரத்தைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தினரான மனோஜ்குமார் மற்றும் மாரியப்பன் ஆகியோரை தாக்கி, அவர்கள்மீது சிறுநீர் கழித்து, ஜாதிய வன்முறையில் ஈடுபட்டு. பொது மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்திய வழக்கில் எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்த தேவர் சமுதாயத்தினரான திருநெல்வேலி மாவட்டம். தாழையூத்தைச் சேர்ந்த (i) பொன்னுமணி, ஆண், வயது 25/2023, த/பெ முத்துகிருஷ்ணன்,
மணக்காடைச் சேர்ந்த (ii) முத்து என்ற நல்லமுத்து,ஆண்,வயது 21/2023, த/பெ சங்கரபாண்டி, (iii) லெட்சுமணகுமார், ஆண், வயது 19/2023. த/பெ கோமு, (iv) ஆயிரம், ஆண், வயது 19/2023, த/பெ ராமகிருஷ்ணன், (v) ராமர், ஆண், வயது 22/2023, த/பெ பாலகிருஷ்ணன் மற்றும் (vi) சிவன் என்ற சிவா, ஆண், வயது 22/2023. த/பெ மாரிமுத்து ஆகியோர் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையாளர். மேற்கு. திரு.K.சரவணகுமார் மற்றும் காவல் உதவி ஆணையாளர்,
ஜங்ஷன் சரகம், திரு.ப.ராஜேஷ்வரன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர், திருமதி.ச.மகேஸ்வரி, இகாப. அவர்களின் உத்தரவின்படி 09.11.2023-ம் தேதி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications