நட்சத்திர ஓட்டலில் பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு மருத்துவர்: ஜாமீன் மனு தள்ளுபடி
கொரோனா சிகிச்சையில் தனிமைப்படுத்துதலில் நட்சத்திர ஓட்டலில் தனிமையில் இருந்த பெண் மருத்துவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு மருத்துவரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை பரவலாக இருந்த நேரத்தில் ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை பணியில் ஈடுபட்டு வருவதால், அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சில மருத்துவர்கள் அரசு செலவில் தங்க வைக்கப்பட்டனர்.

அதேபோல சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் 28 வயதான அரசு மருத்துவர் மோகன்ராஜும் தங்க வைக்கப்பட்டிருந்தார். அவரை போலவே தனிமைப்படுத்துதலில் தங்க வைக்கப்பட்ட அரசு பெண் மருத்துவரின் அறைக்குள் மோகன்ராஜ் புகுந்து, பாலியல் சீண்டல்களை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த பெண் மருத்துவர் மற்றும் விடுதி நிர்வாகம் அளித்த புகாரில், வழக்குப்பதிவு செய்த தேனாம்பேட்டை போலீஸார் மோகன்ராஜை அக்டோபர் 18 ஆம் தேதி கைது செய்தனர். இதேப்போன்று நடசத்திர விடுதியில் தங்கியிருந்த மற்றொரு பெண் மருத்துவரை அரசு மருத்துவர் வெற்றிச் செல்வன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கைதானார்.
இந்நிலையில் தனக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு நீதிபதி செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான நகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜ் ஆஜராகி, ஜாமீன் வழங்க கடும் ஆட்சேபம் தெரிவித்ததையடுத்து, மருத்துவர் மோகன்ராஜின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதேபோல மற்றொரு பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அரசு மருத்துவர் வெற்றிச்செல்வன் என்பவரின் ஜாமீன் மனு கடந்த வாரம் தள்ளுபடியானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications