குறைந்த நீட் தேர்வு தேர்ச்சி விகிதம்.. பள்ளிக் கல்வித்துறை எடுத்த அதிரடி முடிவு.. மாணவர்கள் மகிழ்ச்சி!
சென்னை: நடப்பாண்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 35%ஆக சரிந்ததால் முன்கூட்டியே பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். இதனால் நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அதேபோல் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதுவரை நீட் தேர்வில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என்பதால், அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

குறைந்த தேர்ச்சி விகிதம்
இந்த நிலையில் நடப்பாண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் தேர்ச்சி விகிதம் குறைந்திருப்பது தெரியவந்தது.

4,447 பேர் தேர்ச்சி
அதிலும் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 12,840 அரசுப் பள்ளி மாணவர்களில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். பெரும்பாலான மாவட்டங்களில் 20 முதல் 25 சதவிகித மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மிகக் குறைவாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 7 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்
இதனால் தமிழக அரசு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போதுமான அளவிற்கு நீட் பயிற்சியை வழங்கவில்லை என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பாண்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சியை முன்கூட்டியே தொடங்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் நீட் பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு தொடங்கி வந்த நிலையில், நடப்பாண்டில் அக்டோபர் மாதமே நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு நடவடிக்கை
திறன்மிக்க ஆசிரியர்களை கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும், நீட் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியை அடுத்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு தொடர்பாக போதிய பயிற்சியும், வழிகாட்டுதல்களும் வழங்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications