மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 எப்போது? அதிமுக எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில்!
சென்னை: மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 எப்போது வழங்கப்படும் என்று அதிமுக எம்எல்ஏ சம்பத் குமார் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் கொடுத்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக பட்ஜெட் மற்றும் மானியக் கோரிக்கை விவாதத்தில் இதுதொடர்பாக பேசலாம் என்று கூறிய ஆதவ் அர்ஜுனா, ஆளுநர் உரை குறித்து மட்டும் இப்போது பேசலாம் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று முதலில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள், இயக்குநர் பாரதிராஜா மற்றும் தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரி, ராஜன் உள்ளிட்டோருக்கு இரங்கம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்பின் மேகதாது பிரச்சனை தொடர்பாக முதல்வர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

அது ஒருமனதாக நிறைவேறியது. இதையடுத்து ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது, அதிமுக எம்எல்ஏ சம்பத் குமார், மகளிர் உரிமைத் தொகை விவகாரத்தைக் கையில் எடுத்தார். இதனால் சட்டசபை விவாதம் பரபரப்பாகியது.
அதில், தவெக தனது தேர்தல் அறிக்கையில், முந்தைய திமுக அரசு வழங்கி வந்த மகளிர் உரிமைத் தொகையான ரூ.1,000 ரூபாயை உயர்த்தி, 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ரூ.2,500 ரூபாய் வழங்கும் 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' செயல்படுத்தப்படும் என்று மாபெரும் வாக்குறுதி அளித்திருந்தது. தற்போது தவெக ஆட்சி அமைத்து ஒரு மாதத்திற்கும் மேலாகியும் இன்னும் இந்த 2,500 ரூபாய் எப்போது வழங்கப்படும் என்ற தெளிவான அறிவிப்பு வரவில்லை. இது எப்போது அமலுக்கு வரும்? என்று கேள்வி எழுப்பினார்.
அதிமுக உறுப்பினரின் இந்தக் கேள்விக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எழுந்து, மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவது தவெக அரசின் மிக முக்கியமான தேர்தல் வாக்குறுதியாகும். இதுதொடர்பாக அரசு பல்வேறு நிதிசார்ந்த மறுசீரமைப்பு பணிகளைத் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
தற்போது அவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, மாண்புமிகு உறுப்பினர்கள் இப்போது ஆளுநர் உரை குறித்து மட்டும் பேச வேண்டும். மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 உயர்த்தி வழங்குவது மற்றும் புதிய பயனாளிகள் சேர்க்கை தொடர்பான விரிவான விவரங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து, அடுத்து வரவிருக்கும் முழுமையான பட்ஜெட் மற்றும் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பேசலாம் என்று தெரிவித்தார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் இந்த விளக்கத்தைத் தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்பு தமிழகப் பெண்கள் மத்தியில் மீண்டும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications