ஜப்பான் போன அரசுப் பள்ளி மாணவர்கள்.. பகிர்ந்துகொண்ட பரவச அனுபவங்கள்..
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்கள் 'குண்டு சட்டியில் குதிரை ஓட்டியது' அந்தக் காலம். விமானம் ஏறி உலக நாடுகளைச் சுற்றி வருவதுதான் இந்தக் காலம்.
என்னப்பா சமாச்சாரம் என்கிறீர்களா? விசேஷம் இல்லாமல் இருக்குமா?

இந்த வருடம் தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு எந்த ஆம்னி பஸ்சில் டிக்கெட் கிடைக்கும் என்று நம்மைப் போன்ற பலரும் காத்துக்கொண்டிருந்த நேரத்தில் அரசுப் பள்ளி மாணவர்களை அழைத்துக்கொண்டு ஜப்பான் நாட்டுக்குச் சுற்றுலா சென்று திரும்பி இருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ்.
"'டவுன் பஸ்சில் Footboard' அடிக்கிறார்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் என்று வீடியோ போட்டு வைரல் ஆக்க நினைக்கும் பாஜக நிர்வாகிகள், இந்த இமாலய சாதனையை எல்லாம் எடுத்துக்காட்டி எப்போது பேசி இருக்கிறார்கள்?" என்று நம் காதை கடிக்கிறார் உடன்பிறப்பு ஒருவர்.

அவர் சொல்வது நியாயம்தான். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திரும்பிப் பார்க்கவைக்கும் பல திட்டங்களைச் செய்து சாதித்துக் காட்டி வருகிறது பள்ளிக்கல்வித்துறை.
மாநில அளவில் குறும்படப் போட்டிகளை நடத்தி, அதில் வெற்றி பெற்ற பிள்ளைகளை ஜப்பான் நாட்டுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்றிருக்கிறது பள்ளிக்கல்வித்துறை.

இந்தக் கல்விச் சுற்றுலா அவர்களுக்கு மறக்க முடியாத பண்டிகையாக மாறி இருக்கிறது. ஜப்பானைப் பார்த்துத் திரும்பிய மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார்கள்.
என்ன பார்த்தார்கள்? என்ன கற்றுக்கொண்டார்கள்? அவர்களையே கேட்டோம். மாணவர் செல்வா, "சிறார் திரைப்படம் என்ற போட்டியின் மூலமாக ஜப்பான் நாட்டிற்கு எங்களை பள்ளிக்கல்வித்துறை அழைத்துச் சென்றிருந்தார்கள். ஜப்பான் என்றாலே தொழில்நுட்பங்கள் நிறைந்த நாடு என்பது பலருக்கும் தெரியும்.

ஆனால். நாங்கள் என்ன தெரியுமா பார்த்தோம்? அங்கு நிறையக் கட்டடங்கள் இருந்தாலும், அதற்கு நடுவில் மரங்களை மிகப் பாதுகாப்பாக வைத்துப் பராமரித்து வருகிறார்கள். அதைத்தான் மிக முக்கியமாகப் பார்த்தோம். அங்குள்ள இயற்கை வளங்கள் எந்தளவுக்குப் பாதுகாப்பாக உள்ளன என்பதைப் பார்த்தோம்.
நாங்கள்தான் ஜப்பான் போய் இருக்கிறோம் என்று நினைத்தோம். ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழர்கள் அங்கே சென்று வாழ்ந்துவருகிறார்கள் என்பதை ஜப்பான் தமிழ்ச் சங்கம் போனபோது அறிந்துகொண்டோம். அங்குள்ள தமிழர்கள் கும்மி ஆட்டம் எல்லாம் இப்போதும் ஆடுகிறார்கள். அதைப் பார்க்கவே சந்தோசமாக இருந்தது.

அந்த நாட்டுச் சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் ஹாரன் சத்தத்தை எழுப்புவதே இல்லை. அவர்களுக்கு அதற்காக அவசியமே இல்லை. எல்லோரும் சாலைகளில் குறிப்பிட்ட அளவு இடைவெளியைக் கடைப்பிடிக்கிறார்கள். அதைப் பார்க்கவே வியப்பாக இருந்தது.
உண்மையில் சொன்னால், இது சுற்றுலா பயணம் இல்லை. அறிவுப் பயணமாக எங்களுக்கு அமைந்தது. அந்த நாட்டு மக்களிடம் இருந்து நிறைய விசயங்களைக் கற்றுக்கொண்டோம். இந்த அனுபவம் எல்லாம் என் வாழ்க்கையில் கிடைக்கவே கிடைக்காதவை. இதை எனக்கு ஏற்படுத்தித் தந்த பள்ளிக்கல்வித்துறைக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தடதடவென்று மடை திறந்த வெள்ளம்போல் பேசினார் இந்த மாணவன்.

மாணவி நடாஷா, "எப்படா எங்களையும் வெளிநாட்டுக்குக் கூப்பிட்டுப் போவார்கள் என ஏங்கிக்கொண்டிருந்தோம். இப்போது அந்த ஆசை நிறைவேறிவிட்டது" என்கிறார்.
மாணவி மீனா, "ஜப்பானில் யாருமே தமிழர்களே இருக்கமாட்டார்கள். நாம் மட்டும்தான் தமிழர்களாகப் போகிறோம் என்று நினைத்துக்கொண்டு போனேன். ஆனால் அங்குள்ள இண்டியன் இண்டர்நேஷனல் ஸ்கூலில் படிக்கும் பாதி குழந்தைகள் தமிழில் பேசுகிறார்கள். அதைக் கேட்டபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அங்குள்ள கடல் வாழ் உயிரினங்களை எல்லாம் போய் பார்த்தோம்.

அந்த நாட்டைப் பார்க்கவே நிறைய பொறாமையாக இருந்தது. அந்தளவுக்கு அழகாக அந்த நாடு இருக்கிறது. எங்கள் வீட்டிலேயே முதன்முறையாக வெளிநாட்டுக்குப் போன ஆள் நான்தான். அது எனக்குப் பெருமையாக இருக்கிறது" என்கிறார் வெகுளியாக.
தில்ஷாத் பானு பேசுகையில், "நாங்கள் ஜப்பானில் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். எல்லா இடங்களும் அழகாக இருந்தன. எங்களுடன் வந்த ஆசிரியைகள் மிகப் பாதுகாப்பாக எங்களைப் பார்த்துக்கொண்டார்கள். ஜப்பானில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியம் போய் பார்த்தோம்.

அன்னவாசல் அரசுப் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவி பூர்வீகா, "நான் சிறார் திரைப்படம் என்ற போட்டியில் மாநில அளவில் வெற்றிபெற்றேன். அந்தப் போட்டியில் வென்ற எங்களை அரசு சார்பில் ஜப்பான் நாட்டுக்கு அழைத்துக் கொண்டு சென்றார்கள்.
ஜப்பானைப் பற்றி என்னத் தெரிந்துகொண்டேன் என்றால், அங்குள்ள மக்கள் 80 வயதுக்கு மேல்தான் இறப்பைச் சந்திக்கிறார்கள். ஆனால், நம் நாட்டில் 30 வயதிலேயே பலரும் மரணத்தைத் தழுவிவிடுகிறார்கள். அதை நாங்கள் புரிந்துகொண்டோம். அந்த மக்கள் வயதான காலத்திலும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதைப் பார்த்தபோது நம் நாட்டையும் இதைப் போன்று மாற்ற வேண்டும் என்று தோன்றியது" என்கிறார்.

எங்களை ஜப்பான் தமிழ்ச் சங்கம் நன்றாக உபசரித்தார்கள். தமிழ்நாடு அரசு எங்களுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் மிகச் சிறப்பாகச் செய்து தந்தது. இந்தப் பயணத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது" என்கிறார்.
மாணவி ஹரி பிரியா, "இப்போதுதான் ஜப்பானிலிருந்து தமிழ்நாட்டுக்குத் திரும்பி இருக்கிறோம். முதலில் தமிழ்நாடு அரசுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. சிறப்பான சுற்றுலாவுக்கு அரசுதான் ஏற்பாடு செய்து தந்தது. ஒரு குறையும் இல்லாமல் மனநிறைவோடு ஜப்பானைச் சுற்றிப் பார்த்தோம்.

ஜப்பான் போனபிறகுதான் அந்த நாட்டில் என்னென்ன இருக்கிறது என்பது தெரிந்தது. இதுவரை நானே கற்பனையாக ஜப்பானில் ஏதேதோ இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்தேன். அங்குப் போன பிறகுதான் என் கற்பனைக்கு எல்லாம் உரிய விளக்கம் கிடைத்தது. அட! ஜப்பான் இப்படித்தான் இருக்குமா? என என்னை நானே வியந்து தொட்டுப் பார்த்துக் கொண்டேன்.
அங்குச் சென்ற பிறகு நான் முதலில் வியந்த விசயம் கழிப்பறை வசதிகள்தான். சும்மா செம்மையாக இருந்தது. அந்தளவுக்குத் தரமாக வைத்திருக்கிறார்கள். அந்த நாடே சுத்தமாக இருக்கிறது. யாருக்கு என்ன வேலையோ அதை அவர்கள் செய்கிறார்கள். யாருடைய வேலையிலும் யாரும் தேவையில்லாமல் குறுக்கிடுவது இல்லை. அந்த மாதிரியான குணங்கள் எல்லாம் தமிழர்களுக்கும் வரவேண்டும்.

நாங்கள் இந்தப் பயணத்தில் கடந்த கால ஜப்பானையும் பார்த்தோம். வருங்கால ஜப்பான் எப்படி இருக்கப் போகிறது என்பதையும் பார்த்துவிட்டு வந்தோம். அந்த நாட்டு அருங்காட்சியகம் போய் பார்த்தோம். அப்புறம் எனக்கு விருப்பமான டோக்கியோ ஒலிம்பிக் ஸ்டேடியம் போய் பார்த்தோம்.
அடுத்ததாகப் பேசிய ராஜலட்சுமி, "பல இடங்களைப் போய் பார்த்தோம். அங்குள்ள ஒலிம்பிக் ஸ்டேடியம் போனபோது நாமும் வருங்காலத்தில் இங்கு வந்து விருதுகளை வெல்ல வேண்டும் என்ற உத்வேகம் வந்தது.

இந்தப் பயணம் மனதளவில் என்னை நிறைய மாற்றி உள்ளது. எப்படி சுறுசுறுப்பாக இருக்கவேண்டும்? எப்படி சுத்தமாக இருக்கவேண்டும்? எப்படி உழைக்கவேண்டும்? என்பதை எல்லாம் புரியவைத்தது. இந்தப் பயணத்தை எங்களுக்காக ஏற்பாடு செய்த கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் சாருக்கு நன்றி. முக்கியமாக முதலமைச்சர் ஸ்டாலின் அங்கிளுக்கு மிகப் பெரிய நன்றி" என்கிறார்.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இரண்டு பதிவுகளை ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். முதல் பதிவில், "எனது அன்பான அரசுப் பள்ளி மாணவச் செல்வங்களோடு ஜப்பான் நாட்டில் கல்வி உலா வந்து கொண்டிருக்கிறோம்.

நவீன அறிவியல் தொழில்நுட்பங்களோடு உலகப் புகழ் பெற்று விளங்கும் miraikan அருங்காட்சியகம் மற்றும் டோக்கியோவில் அமைந்துள்ள இந்தியத் தேசியப் பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் சென்றோம்.

இந்த இடங்களும், ஜப்பான் பயணமும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பரந்த பார்வையை அளித்துள்ளது என்பதை அவர்களுடனான பயணத்தின்போதே உணர்கின்றேன். இந்த வாய்ப்பை அளித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மாணவச் செல்வங்களின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்" என அதில் கூறியுள்ளார்.

அடுத்த பதிவில், "ஜப்பான் நாட்டில் வசிக்கும் தமிழர்களை ஒருங்கிணைத்து தமிழுக்காகவும், அங்குள்ள தமிழர்களுக்காகவும் தொடர்ந்து செயலாற்றி வருகின்ற 'ஜப்பான் தமிழ்ச் சங்கம்' அரசுப் பள்ளி மாணவச் செல்வங்களை அன்போடு வரவேற்றது. கலை நிகழ்ச்சிகளின் மூலம் அன்பான வரவேற்பு அளித்த ஜப்பான் தமிழ் உறவுகளுக்கு அன்பும்! நன்றியும்!" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications