2026ல் பழைய ஓய்வூதிய திட்டம், இலவச லேப்டாப்! அடுத்து பொங்கல் ரொக்கம்தான்! திமுகவின் ஹாட்ரிக் சிக்ஸர்
சென்னை: அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேறியது, மாணவர்களுக்கு 20 லட்சம் லேப்டாப்கள் தரப்படவுள்ளன. அடுத்து என்ன தெரியுமா? 2026 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே திமுக அடித்த ஹாட்ரிக் சிக்ஸர் இவைதான்!
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக தேர்தல் வாக்குறுதிகளை தயாரிக்க திமுக சார்பில் கனிமொழி தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

எனினும் கடந்த 2021 ஆம் ஆண்டு சொன்ன வாக்குறுதிகளையே திமுக நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அதில் முக்கியமானது அரசு ஊழியர்கள், அரசு ஆசிரியர்களின் கோரிக்கையாகும். பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் போட்டா ஜியோ, ஜாக்டோ ஜியோ ஆகிய அமைப்பினருடன் நேற்றைய தினம் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வெளியே வந்த இரு அமைப்பினரும் செய்தியாளர்களிடம் கூறுகையில், பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நாளை (இன்று) நல்ல முடிவை அறிவிப்பார் என அமைச்சர்கள் சொன்னதாக தெரிவித்தனர்.
அந்த வகையில் இன்றைய தினம் பழைய ஓய்வூதியம் குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதாவது அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் (டி.ஏ.பி.எஸ்.,) என்ற திட்டத்தை செயல்படுத்துவதாக முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்தார். இதன் மூலம், அரசுக்கு ஆண்டுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்.
கடந்த 23 ஆண்டுகால பழைய ஓய்வூதிய திட்டம் அமலாகும் என எதிர்பார்த்து அரசு ஊழியர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் தற்போது அது நிறைவேற்றப்பட்டது.
அது போல் தமிழகத்தில் வரும் 2026-ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இளைஞர்களை கவரும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
திமுக அரசு கடந்த பட்ஜெட்டின்போது, 2 ஆண்டுகளில் சுமார் 20 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். இதற்காக ரூ.2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 3000 ரூபாய் தர வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்படுகிறது. கடந்த முறை இந்த பரிசுத் தொகை வழங்கப்படாமல் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவை வழங்கப்பட்டது.
அதே போல் இந்த முறையும் பெங்கல் பரிசுத் தொகையை ரூ 5000 ஆக வழங்க எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை வலியுறுத்தி வருகிறார். அது போல் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் பொங்கல் பரிசுத் தொகையை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
நேற்று முன் தினம் கரும்பு, பச்சரிசி, சர்க்கரை கொள்முதல் செய்ய ரூ 248 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ரொக்கம் கொடுக்க ரூ 2000 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே பொங்கல் பரிசுடன் ரொக்கம் இல்லை என சொல்லப்பட்டது.
இந்த நிலையில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் வருவதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஆதரவை பெறுவதை போல் ஏழை எளிய மக்களின் அன்பையும் பெற வேண்டும் என திமுக கருதுகிறது. இதனால் பொங்கல் பரிசை கொடுக்க போவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே பழைய ஓய்வூதிய திட்டம், 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் என இரு கோரிக்கைகளுடன் சேர்த்து பொங்கல் ரொக்கப் பரிசும் கொடுக்கப்படவுள்ளதால் 2026 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே ஹாட்ரிக் சிக்ஸரை திமுக அடித்துவிட்டதாகவே கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications