விரைவில் தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி உதவி.. முதல்வர் சூப்பர் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் அனைத்து தொழிலாளர் குடும்பத்தினருக்கும் ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி உதவி வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இன்று இரண்டாவது நாளாக முதல்வர் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டம் இன்று நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு மனுக்களை பெற்றமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 1,259 பயனாளிகளுக்கு ரூபாய் 6 கோடியே 84 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

புதிதாக 5லட்சம் பேருக்கு
விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "புதிதாக 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் .வீடு இல்லாதவர்களுக்கு அனைவருக்கும் வீடு கட்டித் தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பாரத பிரதமரின் வீடு கட்ட திட்டத்தின் கீழ் வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு கட்டித் தருவது எங்களின் இலட்சியம். தமிழகத்தில் குடிசைகள் இல்லாத பகுதியாக மாற்றி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏரிகளை பாதுக்க வேண்டும்
தமிழகத்தில் தற்போது அதிகமாக மழை பெய்து வருகிறது. அதனை சேமிக்கும் திட்டத்தை செயல்படுத்தி நடைமுறைபடுத்தி வருகிறோம். இதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விவசாயிகள் ஏரிகளை பராமரிக்க முன்வர வேண்டும். நீரை பாதுகாப்பது அனைவரது கடமை.

தலைவாசலில் கால்நடை பூங்கா
ஆசியாவில் மிகபெரிய கால்நடை பூங்கா 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1200 ஏக்கர் பரப்பளவில் தலைவாசலில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குடிமராமத்துப் பணியில் விவசாயிகள் ஆர்வத்துடன் அக்கறை செலுத்தி ஈடுட வேண்டும். கண்ணுக்கு எப்படி இமை இருக்கிறதே அதை போன்று தங்களது பகுதியில் உள்ள ஏரிகளை விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் பாதுகாக்க வேண்டும். சேலம் தலைவாசலில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை பதபடுத்த கிடங்கு அமைக்கப்படும்.

தடுப்பணைகள் கட்டப்படும்
மழைநீர் வீணாகாமல் இருக்க பல ஆயிரம் கோடியில் தடுப்பணைகள் கட்டப்பட உள்ளது. தமிழகத்தில் வேளாண் தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், நெசவு தொழிலாளர்கள் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. இந்த பணிகள் முடிந்ததும் ஒரு குடும்பத்துக்கு ரூபாய் 2 ஆயிரம் சிறப்பு நிதியுதவி வழங்கப்படும்.

எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம்
ரூ.27 கோடி மதிப்பில் வீரகனூர் பகுதியில் புதியதாக ஏரி உருவாக்கப்படும். காய்கறிகள் மற்றும் பழங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய வசதியாக சென்னைக்கு அருகில் ரூ.2 ஆயிரம் கோடியில் உணவு பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த ஆட்சியில் பல திட்டங்கள் நிறை வேற்றப்பட்டு வருகிறது.. மேலும் திட்டங்கள் வர உள்ளது. ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு எந்த திட்டமும் செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கின்றன. தவறான தகவல்களை திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள். இருந்தாலும் எங்கள் இலட்சிய பாதையில் நாங்கள் பயணிப்போம்" இவ்வாறு கூறினார்











Click it and Unblock the Notifications