2 அமைச்சர்களுக்கு கூடுதல் இலாகா ஒதுக்கீடு.. முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைக்கு ஆளுநர் உடனடி ஒப்புதல்!
சென்னை: பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித்துறை தற்போது அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கதர் மற்றும் கிராமிய தொழில் இலாகா, அமைச்சர் ஆர்.காந்திக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. தண்டனையை எதிர்த்து பொன்முடி மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் இந்த சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சரணடைய 30 நாட்கள் அவகாசம் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், 30 நாட்கள் கால அவகாசத்துக்குள் சரணடையாவிட்டால், தண்டனையை அனுபவிக்கச் செய்வதற்கான நடைமுறைகளை விழுப்புரம் நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் பதவிகளை இழக்கிறார் என்பதால், அவர் அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த உயர்கல்வித்துறை இலாகாவானது, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு மாற்றப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு உயர்கல்வித் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறையை கூடுதல் பொறுப்பாக வழங்க ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரை செய்தார். அதனை உடனடியாக ஏற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
அதேபோல, அமைச்சர் ராஜகண்ணப்பன் வசம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்கள் துறை, கைத்தறித்துறை அமைச்சர் காந்திக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முதலமைச்சரின் பரிந்துரைக்கும் ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாகவும், பட்டமளிப்பு விழா பேச்சுகள் தொடர்பாகவும், தமிழக ஆளுநர் ரவிக்கும், உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கும் பல்வேறு மோதல்கள் நிலவி வந்தன. ஆளுநர் பங்கேற்கும் பல்கலைக்கழக விழாக்களை பொன்முடி புறக்கணித்து வந்தார். இந்நிலையில், பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பதவி ராஜகண்ணப்பனுக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications