ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் சந்திக்கும் திட்டம் திடீர் ரத்து- 7 பேர் விடுதலை என்னவாகும்?
ஏழுபேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிச்சாமி சந்தித்து பேச இருந்தாக கூறப்பட்ட நிலையில் அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி சந்திக்கும் திட்டம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ராஜ்பவனில் இன்று மாலை ஆளுநரை முதல்வர் சந்திக்க இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சமீபத்தில் மருத்துவ படிப்புக்கான அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, ஆன்லைன் ரம்மிக்கு தடை, அண்ணா பல்கலை. சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என மத்திய அரசுக்கு கடிதம் என பல விவகாரங்கள் சுற்றி வருகின்றன.
குறிப்பாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுவிக்க கோரி கோரிக்கை வலுத்து வருகிறது. ஒருபுறம் எழுவர் விடுதலைக்கு ஒப்புதல் கேட்டு தமிழக அரசு கோப்புகளை சமர்ப்பித்த நிலையில், ஆளுநர் இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வருகிறார்.
நாளை தீவிர புயலாக மாறும் நிவர்.. தமிழகம், புதுவையில் நாளை முதல் 26 வரை கனமழை.. வானிலை மையம்
இந்த சூழலில் தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழக ஆளுநர் பன்வாரிலாலை இன்று சந்தித்து பேசவுள்ளார். ஆளுநருடனான சந்திப்பில் இவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தடுப்பு வழிமுறைகள், அத்துடன் 7 பேர் விடுதலை குறித்தும் ஆலோசிக்கலாம் என தகவல் வெளியானது.
இந்த நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி சந்திக்கும் திட்டம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் நிச்சயம் ஆளுநரிடம் பேசி விடுதலை வாங்கித் தருவார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் எதிர்பார்ப்புடன் கூறியிருந்தார். இந்த நிலையில் ஆளுநர் முதல்வர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது ஏழுபேர் விடுதலையை எதிர்நோக்கியிருந்த தமிழ் ஆர்வலர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.