2 நாள் தான் டைம்.. பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு 48 மணி நேரம் கெடு விதித்த ஆளுநர்! முடியுமா?
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக பிரம்மாண்ட வெற்றி பெற்றிருக்கிறது. அந்த கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவளித்திருக்கும் நிலையில் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். நாளை தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ள நிலையில், விஜய் தனது ஆட்சிக்கான பெரும்பான்மையை 2 நாட்கள் அதாவது 48 மணி நேரத்திற்குள் நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இந்தத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் முழு தீவிரத்துடன் இறங்கியுள்ளார் விஜய்.
234 தொகுதிகள் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால், இந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இதனால், பெரும்பான்மை பெற இன்னும் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலை உள்ளது. தற்போதைய சூழலில் குறைந்தது 10 முதல் 11 உறுப்பினர்களின் ஆதரவை பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்காக பல கட்சிகளுடன் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. முதல் வாய்ப்பாக பார்க்கப்பட்டது காங்கிரஸ். 5 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட இந்தக் கட்சி, ஆட்சியில் பங்கு மற்றும் அமைச்சரவை வாய்ப்பை கருத்தில் கொண்டு ஆதரவு தரும் என அறிவித்துள்ளது.
தற்போதைய சூழலில் விஜய்க்கு 113 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது. மேலும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால் விஜய் எந்த சிக்கலும் இன்றி ஆட்சி அமைக்கலாம். இதற்கிடையே தமிழக வெற்றி கழகம் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநரை சந்தித்த விஜய் ஆட்சி அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு உரிமை கோரினார்.
தொடர்ந்து கடிதத்தை பரிசீலித்த ஆளுநர் நாளை விஜய் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதே நேரத்தில் முதல்வராக பதவியேற்ற இரண்டு நாட்கள் அதாவது 48 மணி நேரத்திற்குள் விஜய் தனது ஆட்சிக்கான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கெடு விதித்துள்ளார்.
வழக்கமாக 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் இருந்தால் மட்டுமே ஆளுநர் அழைப்பு விடுப்பார். ஆனால் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதால் விஜயை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ள ஆளுநர், 48 மணி நேரத்திற்குள் தனி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். தற்போதைக்கு விஜய்க்கு 113 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே இருக்கும் நிலையில் ஆதரவை இரண்டு நாட்களுக்குள் பெற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.














Click it and Unblock the Notifications