ஸ்டாலினுடன் துணை முதல்வர் உதயநிதி.. "மிஸ்" ஆன மூத்த அமைச்சர் துரைமுருகன்! ஆளுநரும் வரல! என்ன ஆச்சு?
சென்னை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை எழும்பூர் மியூசியம் வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இன்று நடந்த இந்த நிகழ்வில், ஆளுநர் ஆர்.என்.ரவியும், அமைச்சர் துரைமுருகனும் கலந்து கொள்ளவில்லை. கடந்த ஆண்டு காந்தி பிறந்த நாள் விழாவில் ஆளுநர் ரவியும், அமைச்சர் துரைமுருகனும் கலந்து கொண்ட நிலையில் இந்த ஆண்டு இவர்கள் இருவரும் பங்கேற்காதது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாளான இன்று காந்தி ஜெயந்தியாக நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்களும் காந்தியின் சிலை மற்றும் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன்படி டெல்லி ராஜ்கோட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், டெல்லி முதலமைச்சர் அதிஷி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சிய வளாகத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அருங்காட்சிய வளாகத்தில் உள்ள காந்தியின் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மா சுப்பிரமணியன், சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, சென்னையைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆனால், கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று, முதல்வர் ஸ்டாலுனுடன் இணைந்து மரியாதை செலுத்திய ஆளுநர் ரவி, மூத்த அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் இன்று முதல்வருடன் இணைந்து மரியாதை செலுத்த வரவில்லை. அதேசமயம், சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அண்மையில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக்கப்பட்டது, அமைச்சரவை மாற்றம் ஆகியவை திமுகவில் புகைச்சலை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்ற காந்தி ஜெயந்தி நிகழ்வில் மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் ஆப்செண்ட் ஆகியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற சிவாஜி கணேசன் 97-வது பிறந்த நாள் விழாவிலும் மூத்த அமைச்சர் துரைமுருகன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications