ஆளுநர் ரவி எம்.ஜி.ஆர் அல்ல; நம்பியார்? தராசு ஷ்யாம் குட்டு!
உயர் கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.50 லட்சம் அபராதம் விதித்திருந்தது சென்னை உயர்நீதிமன்றம்.
ஆகவே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி பொன்முடி தனது எம்.எல்.ஏ, அமைச்சர் பதவியை இழந்தார். உடனடியாக பொன்முடி வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதி காளியானதாகவும் அறிவிக்கப்பட்டது.

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கும் நீதிமன்றம் அவகாசம் அளித்திருந்தது. ஆகவே தனக்கும் மனைவி விசாலாட்சிக்கும் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
தீர்ப்பின் அடிப்படையில் பொன்முடி மீண்டும் திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக தகுதி பெற்றார். அவரது தொகுதி காலியானதாக வெளியிடப்பட்ட அறிவிப்பும் உடனடியாக திரும்பப்பெறப்பட்டது.
உடனடியாக பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கோரி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்குக் கடிதமும் அனுப்பினார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியோ, பொன்முடி மீது ஊழல் கறை படிந்துள்ளது; அவருக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என மறுத்தார். ஆகவே இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகி இருந்தது தமிழ்நாடு அரசு. பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவெடுக்க நாளை வரை அவகாசம் வழங்குகிறோம் என்று ஆளுநரை எச்சரித்திருந்தது.
இந்நிலையில் பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க அழைப்பு விடுத்துள்ளதாக ஆளுநர் ரவி தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
ஆளுநர் ரவியை இப்படித் தொடர்ந்து நீதிமன்றம் எச்சரித்து வருகின்றது. பல வழக்குகளில் அவர் தோல்வியைத் தழுவி வந்தாலும், தொடர்ந்து சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறார். அதற்கு என்ன காரணம்? அனுபவம் இல்லாததா? அல்லது அரசியல் உள்நோக்கமா? இல்லை எனில் தனக்கான அதிகாரம் புரியாமல் உள்ளாரா ஆளுநர்.
இப்படிப் பல கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம். ஆளுநருக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து ஷ்யாம், "உச்சநீதிமன்றத்தின் அதிகாரம்தான் உயர்ந்தது என்பதை இப்போது ஆளுநர் உணர்ந்திருப்பார். நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறது. சட்டத்தின் ஆட்சி என்றால் என்ன?
ஒன்று Rule of law இரண்டு Due process. இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்றால் உரிய நெறிமுறைகளின் படி எல்லாம் நடக்க வேண்டும்.
இவை எல்லாம் அரசியல் சாசனத்தின் விதிமுறைகள். அரசியல் சாசனத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதைத் தாண்டிய அதிகாரம் ஆளுநருக்குக் கிடையாது. அவருக்கு என்ன? யாருக்குமே கிடையாது. அரசியல் சாசனத்தின் காவலர் உச்சநீதிமன்றம்.
அப்படிப் பார்த்தால், ஆளுநர் அதன்படி பதவியேற்பு விழாவை பொன்முடிக்குச் செய்துவைத்திருக்க வேண்டும். இன்று காலை அவர் ராஜினாமா செய்து விடுவார் எனத் தகவல் பரவியது. நான் கூட அப்படியே நம்பினேன். ஒரு வேளை ராஜினாமா செய்துவிட்டு, மக்களவைத் தேர்தலில் பீகாரில் போட்டியிடலாம் என நினைத்தேன். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை.
எது எப்படியோ அவர் பணிந்திருப்பது வரவேற்க வேண்டிய ஒன்றுதான். அவருக்கு வேறு வழியே இல்லை.
ஆளுநர் ரவியின் செயல்பாட்டால் அரசின் நேரம் விரயமாகிறது. மக்களின் வரிப்பணமும் விரயமாகிறது. நீதிமன்றம் சென்று ஒரு தீர்ப்பைப் பெறக்கூடிய சூழலை ஆளுநர் ஏன் ஏற்படுத்த வேண்டும்? அது மக்களின் பணம் இல்லையா?
ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்றுதான் உத்தரவைப் பெற வேண்டும் என்ற சூழலை ஆளுநர் உருவாக்குகிறார். இது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல.
ஒரு குடியரசுத் தலைவரின் அதிகாரம் என்ன? ஒரு ஆளுநரின் அதிகாரம் என்ன? என்று அரசியல் சாசனம் தெளிவாகச் சொல்கிறது. அவர்கள் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பது தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது. இதில் எதுவுமே புதியதல்ல. சட்டத்தின்படி செயல்படுவதில் ஆளுநருக்கு என்ன பிரச்சினை?
இதன் மூலம் தனக்குப் புகழ் கிடைக்கும் என்று ஆளுநர் நினைக்கிறார். வில்லனுக்குக் கூட புகழ் கிடைக்கும். எம்.ஜி.ஆர். புகழ் வாய்ந்தவர் என்றால் நம்பியாரும் புகழ் வாய்ந்தவர்தான். ஆனால், அவர் ஹீரோ ஆகிவிட முடியாது.
ஆளுநர் என்பவர் மத்திய அரசின் பிரதிநிதி. அவர் எப்படி மாநில அரசுடன் போட்டிப் போட முடியும்? ஆர்.என்.ரவி அப்படித்தான் செய்கிறார்.
இந்தப் பிரச்சினையோடு அவர் நின்றுவிடமாட்டார். அடுத்த வாரம் ஒரு பிரச்சினையைக் கிளப்பிவிடுவார். அவரது பெயர் செய்தித் தாள்களில் அடிபட வேண்டும் என அவர் நினைக்கிறார்.
காலை நிலவரப்படி அவர் பதவிப் பிரமாணம் செய்துவைக்கக் கூடிய மனநிலையில் இல்லை என்றே சொல்லப்பட்டது. உள்துறை அமைச்சகம் இந்த விவகாரத்தில் தலையிட்ட பிறகு அவர் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார். இது ஆளுநருக்கு மட்டும் பின்னடைவு அல்ல. மத்திய அரசுக்கும் பின்னடைவுதான்" என்கிறார்












Click it and Unblock the Notifications