அண்ணா பல்கலை.யில் அலறிய மாணவி! தனி ஆலோசனை.. ஆக்சனில் இறங்கிய ஆளுநர்! பறந்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு!
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் கல்லூரி மாணவி, மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்கலைக் கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி பல்கலைக் கழகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவிகளிடையே தனி தனியாக ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் பல்கலைக் கழக நிர்வாகத்தினருக்கும் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை கூறியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர் போலீசார்.

மேலும் இது தொடர்பாக சென்னையில் பிரியாணி கடை நடத்தி வருபவரும், திமுகவை சேர்ந்த வருமான ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு கை கால்களில் மாவு கட்டு போடப்பட்டுள்ள நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மாணவி பாலியல் தாக்குதல்:
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக மாணவியின் பெயர், விலாசம், தொலைபேசி எண் உள்ளிட்டவை அந்த எஃப்ஐஆர்-ல் இடம் பெற்று இருந்தது. இந்நிலையில் சம்பவம் நடந்த அண்ணா பல்கலைக் கழகத்தின் வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்என் ரவி திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சம்பவம் நடந்த இடம் மற்றும் பிற பகுதிகளில் ஆய்வு நடத்திய அவர் மாணவர்களை தனித்தனியாக சந்தித்து பேசினார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி:
இந்நிலையில் பல்கலைக் கழக நிர்வாகத்தினருக்கும் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை கூறியுள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,"சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துயரமிகு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர்-வேந்தர் அவர்கள் இன்று (28.12.2024) மதியம் 12.30 மணியளவில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவும், மாணவ, மாணவியர்களுடன் உரையாடவும், நமது மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்திட தீர்க்கமான நடவடிக்கைகள் மேற்கொள்வதை உறுதிப்படுத்திடவும் வருகை தந்தார்.
மாணவர்களுடன் கலந்துரையாடல்:
இவ்வாய்வின் போது, மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர்- வேந்தர் அவர்கள் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் மூத்த பேராசிரியர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி பல்கலைக்கழக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் ஆளுநர்-வேந்தர் அவர்கள் மாணவர்களுடன் தனித்தனியாக) (பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடல் வாயிலாக பல்கலைக்கழக வளாகத்தை மிகவும் பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கு மாணவர்கள் கூறிய கருத்துக்கள், பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை மிகவும் பொறுமையாக கேட்டறிந்தார்.
அச்சம் வேண்டாம்:
மாண்புமிகு ஆளுநர் அவர்கள் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனே பிரதானமானது என்று கூறியதுடன், மாணவர்கள் எழுப்பிய பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். அண்ணா பல்கலைகழகத்தில் பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இச்சம்பவம் குறித்து அச்சம் அடைய வேண்டாம் என்றும், மேலும் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான பாதுகாப்புச் சூழலை மேம்படுத்திடவும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு மாண்புமிகு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications