ஓராண்டை நிறைவு செய்த திமுக அரசு.. முதல்வர் & அமைச்சர்களை வாழ்த்திய ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை: திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடையும் நிலையில், இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, 159 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது.

திமுக தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைத்த நிலையில், ஆளும் கட்சியாகத் தேர்தலை எதிர்கொண்ட அதிமுக தோல்வி அடைந்தது. அதிமுகவால் வெறும் 66 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.

இந்த வெற்றிக்குப் பின்னர், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..." எனக் கூறி முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு பதவி ஏற்றார்,
இதையடுத்து நேராகத் தலைமைச் செயலகத்திற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், பெண்களுக்கு இலவச பஸ் போக்குவரத்து, பால் விலை குறைப்பு உள்ளிட்ட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.
திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடையும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் தனது அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு பேசினார். மேலும், இன்று 5 புதிய திட்டங்களையும் அவர் அறிவித்தார்.
அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் காலை நேரத்தில் சிற்றுண்டி, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சிறப்புத் திட்டம், டெல்லியை போல தமிழ்நாட்டிலும் பள்ளிகள், 21 மாநகராட்சிகளில், 63 நகராட்சிகளில் நகர்ப்புற மருத்துவ நிலையங்கள், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் ஆகிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
Recommended Video
இதனிடையே திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடையும் நிலையில், இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை தனது ட்விட்டரில், "தமிழ்நாடு ஆளுநர், ஆர்.என்.ரவி, ஆட்சியின் முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அனைத்து அமைச்சர்களுக்கும் தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications