“காந்தியை இன்றைக்கும் கேலி செய்யணுமா?” முதல்வர் ஸ்டாலினிடம் ஆளுநர் ரவி கேட்ட கேள்வி!
சென்னை: மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி, இன்று சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி படத்துக்கு தமிழக முதல்வர் மரியாதை செலுத்தியது பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். காந்தி மண்டபத்தில் மரியாதை செலுத்தாதது பற்றி விமர்சித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் 78வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் என பல தரப்பினரும் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியை ஏற்றுக் கொண்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலையின் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர்.
அதேசமயம், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் காந்தியின் புகைப்படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜ் பவனின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "காந்தி மண்டபம், சென்னை கிண்டி தேசிய உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள ஒரு பரந்த நிலத்தில் 1956 ஆம் ஆண்டு கே. காமராஜரால் பிரம்மாண்டமான நினைவுச் சின்னமாக கட்டப்பட்டிருக்கிறது. மகாத்மா காந்தி நினைவு நிகழ்வுகளை - அவரது பிறந்தநாள் மற்றும் உயிர்த்தியாக தினத்தை - நகர அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் மாநில அரசின் சார்பில் நடத்துவதில் ஏதேனும் அர்த்தமுள்ளதா?
தேசப்பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்தவும், அத்தகைய நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்தவும் முதலமைச்சரிடம் நான் பலமுறை கோரிக்கைகள் விடுத்தேன்.ஆனால், எனது கோரிக்கைகள் பிடிவாதமாக மறுக்கப்பட்டுள்ளன. காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார். ஆனால் இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார். ஆளுநரின் இந்த பதிவு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.













Click it and Unblock the Notifications