ஜாதி வெறி.. “பாயிண்டை” பிடித்த ஆளுநர் ரவி! குடிநீரில் மலம்.. கோயிலில் தலித்களுக்கு தடை என வேதனை
சமூக நீதி அதிகம் பேசப்படும் நிலையில் குடிநீர் தொட்டிகளில் மலம் கலப்பது போன்ற செயல்கள் வேதனையளிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை: சமூக நீதி பற்றி அதிகம் பேசிக்கொண்டு இருக்கும் நேரம் அதற்கு மாற்றமான சம்பவங்கள் நடப்பதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.தெரிவித்து இருக்கிறார். தலித்துகளை கோயிலுக்கு செல்ல விடாமல் தடுக்கும் செயல்களும், குடிநீர் தொட்டிகளில் மலம் கலப்பது போன்ற சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டுதான் இருப்பதாக அவர் வேதனை தெரிவித்தார்.
"மோடியும் அம்பேத்கரும்" என்ற பெயரில் இருவரையும் ஒப்பிட்டு புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் என்ற நிறுவனம் ஆங்கிலத்தில் புத்தகம் ஒன்றை வெளியிட்டு இருந்தது.
இசையமைப்பாளர் இளையராஜா இந்த புத்தகத்திற்கு முன்னுரை எழுதி இருந்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. பிரதமர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு அவர் அவ்வாறு எழுதி இருந்தார்.

புத்தகம் வெளியீடு
இந்த நிலையில் மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி 'Ambedkar and Modi - Reformer's ideas, Performer's implementation' என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் வெளியிட்டது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழில் புத்தகம் வெளியீடு
இந்த நிலையில் இந்த புத்தகம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் 20 கனவுகளை விளக்கும் மோடி @ 20 புத்தகமும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு இன்று காலை வெளியிட்டப்பட்டது. இதில்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அம்பேத்கரை அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர்
இந்த நிகழ்ச்சியில் புத்தகங்களை வெளியிட்டு பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, "அம்பேத்கர் பாகிஸ்தான் பற்றி எழுதிய புத்தகங்களை நான் படித்து இருக்கிறேன். அம்பேத்கரை இதுவரை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தி வந்து இருக்கிறார்கள். அவர் அரசியலமைப்பின் தந்தை மட்டும் அல்ல. சமூக பிரச்சனைகளுக்காக முன் நின்றார். கோயில்களில் அனுமதி மறுப்பு, பள்ளிகளில் பிரிவினை போன்றவற்றை எதிர்த்தார்.

தொடரும் சாதிய கொடூரம்
சமூக நீதி குறித்து அதிகளவில் பேசுகிறோம். ஆனால், நடப்பவை அதற்கு மாற்றமாக உள்ளன. கோயிலுக்கு செல்ல விடாமல் தடுக்கும் செயல்கள் தொடர்ந்து வருகின்றன. இன்னும் குடிநீர் தொட்டிகளில் மலம் கலப்பது போன்ற சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. பட்டியல் சமூதாய பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் 7 சதவீதம் பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் வருத்தம் தருகின்றன." என்றார்.

வேங்கைவயல் சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் கிராமத்தில் கடந்த டிசம்பவர் மாதம் பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்கள் பயன்படுத்தும் நீர்தேக்க தொட்டியில் மலம் கொட்டப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அதே கிராமத்தில், இரட்டை குவளை முறை தொடர்வதாகவும், கோயிலில் தலித்துகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக புகாரளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சேலம் திமுக நிர்வாகி
இதேபோல் சேலம் மாவட்டம் திருமலைகிரியில் அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவிலுக்குள் நுழைந்ததற்காக தலித் இளைஞரை திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் அபாசமான வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்ததால் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications