"மாநாடு".. நீலகிரியில் ஆளுனர் பெரிய மூவ்! மாத்தணும்.. அப்பவே சொன்ன முதல்வர்! உற்று பார்க்கும் திமுக
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி தொடங்கி வைக்க இருக்கும் முக்கியமான மாநாடு ஒன்று திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது என்ன மாநாடு.. திமுக வட்டாரத்தில் ஏன் இது கொதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று பார்க்கலாம்.
Recommended Video
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவிக்கும், ஆளும் திமுக தரப்பிற்கும் பல்வேறு விவகாரத்தில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி ஏற்றுக்கொள்ளாதது இரண்டு தரப்பு மோதலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அதேபோல் 9 மசோதாக்களை ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு இருப்பதும் கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது. இந்த நிலையில்தான் ஆளுநர் ரவிக்கு எதிராக சமீபத்தில் கருப்பு கொடி காட்டப்பட்டது.

கருப்பு கொடி
தமிழ்நாடு ஆளுநர் ரவி சமீபத்தில் சிதம்பரத்தில் தருமபுரம் ஆதீனத்தில் ஞானரதத்தை துவக்கி வைத்தார். ஆளுநரின் இந்த பயணத்தை திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்தது. அதோடு அவருக்கு எதிராக மயிலாடுதுறையில் திமுக கூட்டணி கட்சிகளும், திவிக, திகவும் கடுமையாக போராட்டம் செய்தன. ஆளுநர் கான்வாய் மீது கல் வீச்சு நடைபெற்றதாக பரபரப்பு புகார் எழுந்தது. ஆனால் இதற்கான ஆதாரம் இல்லை. போலீஸ் தரப்பு இந்த செய்திகளை மறுத்துள்ளது.

டெல்லி பயணம்
இந்த நிலையில்தான் ஆளுனர் ரவி டெல்லி சென்றார். அங்கு முக்கியமான தலைகளை ஆளுநர் ரவி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வந்தன. ஆனால் ஆளுநரின் சந்திப்புகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் பொதுவில் வெளியிடப்படவில்லை. இந்த டெல்லி பயணமும், ஆளுநர் மீதான திமுகவின் எதிர்ப்பும் இரண்டு தரப்பு மோதலை பெரிதாக்கும் என்ற சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி தொடங்கி வைக்க இருக்கும் முக்கியமான மாநாடு ஒன்று திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாநாடு
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு நீலகிரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடக்க உள்ளது. வரும் 25, 26-ம்தேதிகளில் நடைபெறுகிறது. இதை ஆளுநர் ரவி தொடங்கி வைக்க இருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாடு ஆளுநர் மாளிகையில் நடப்பதும், அதை ஆளுநர் தொடங்கி வைப்பதும் திமுக தரப்பில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

பல்கலைக்கழகம்
பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர்தான் வேந்தர். துணை வேந்தர்களை தற்போது ஆளுநர்தான் நியமித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில், துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமனம் செய்யும் திட்டத்தில் இருக்கிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இது தொடர்பான மசோதாவை தாக்கல் செய்யவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. துணை வேந்தர்களை ஆளுநருக்கு பதிலாக அரசே நியமனம் செய்யும் மசோதாவை விரைவில் தாக்கல் செய்வோம் என்று முதல்வர் ஸ்டாலினும் சமீபத்தில் சட்டசபையில் பேசி இருந்தார்.

என்ன?
அண்மையில் மகாராஷ்டிரா மாநிலத்தில், ஆளுநர் பல்கலைக்கழக வேந்தராகப் பதவி வகிக்கும் பொறுப்புக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. இந்த நிலையில்தான் துணை வேந்தர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டை ஆளுநர் ரவி துவங்கி வைக்க இருக்கிறார். புதிய உலக சூழலில் இந்தியாவின் பங்கு என்ற தலைப்பில் இந்த மாநாடு நடக்கிறது. இதில் ஸோகோ கார்ப்பரேஷன் தலைமைச் செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு கலந்து கொள்கிறார்.

யார் கலந்து கொள்கிறார்
அதேபோல் யுஜிசி தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் கலந்து கொள்கிறார். 20 பல்கலைக்கழக துணை வேந்தர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். பல்வேறு பேராசிரியர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர். ஆளுநர் ரவியின் மாநாடு பிளான் திமுக தரப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநருக்கு இருக்கும் இந்த அதிகாரத்தை நீக்க திமுக முயன்று வரும் நிலையில்தான் ஆளுநர் இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications