மத்திய அரசு 1 பைசா கூட தரலையே! ஆளுநர் அய்யா ரூ 50 ஆயிரம் கோடி வாங்கி தரலாமே? அப்பாவு அதிரடி கோரிக்கை
சென்னை: புயல் வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு 1 பைசா தரவில்லை, பிஎம் கேர் நிதியில் இருந்து ரூ50,000 கோடி ஆளுநர் வாங்கி தரலாமே என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்றைய தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி அவைக்குள் வந்து உரையை வாசிக்க ஆயத்தமாகினார்.

அப்போது ஆளுநர் ரவி, சட்டசபையின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என தொடர்ச்சியாக நான் வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. அரசு தயாரித்த உரையில் இடம் பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன.
இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக் கூத்தாகும் செயலாகிவிடும் என்பதால் இத்துடன் எனது உரையை முடித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழகம், வெல்க பாரதம்.. நன்றி என ஆளுநர் தெரிவித்தார். அதாவது தமிழக அரசு எழுதி கொடுத்த உரையை முழுவதுமாக படிக்காமல் அவர் புறக்கணித்தார்.
பிறகு அவையிலேயே அமர்ந்திருந்தார். அப்போது ஆளுநர் படிக்க வேண்டிய உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அந்த உரையில் திருக்குறள் இடம் பெற்றிருந்தது.
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து
மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு என கூறப்படுபவைகளாகும் என்பதுதான் இந்த குறளின் விளக்கம்.
இதைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தொடர்ந்து பேசினார். அவர் வாசிக்கையில் நிதி நெருக்கடிக்கு இடையே சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்ட பணிகளுக்கு தனது பங்களிப்பை வழங்குவதாக உறுதியளித்த ஒன்றிய அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழகம் திறம்பட செயல்படுகிறது.
தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியை ஒன்றிய அரசு தராதது வருத்தம் அளிக்கிறது. சிறுபான்மையினர், இலங்கைத் தமிழர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என சபாநாயர் அப்பாவு வாசித்து முடித்தார். இதைத் தொடர்ந்து தமிழக அரசு கொடுத்த உரையை வாசிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி அவைக்கு வந்திருந்தார்.
அவருக்கு உரிய மரியாதையை இந்த அவை வழங்கியது. ஆனால் அவர் தமிழக அரசின் உரையை முழுமையாக வாசிக்கவில்லை, அதை நான் தவறு சொல்லவில்லை. அது போல் அவையின் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆளுநரை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் மனதில் இருப்பதை நீங்கள் சொன்னீர்கள். இவ்வளவு பெரிய வெள்ளம், புயல் ஏற்பட்டிருக்கிறது ஒரு பைசா கூட தரவில்லை, பல லட்சம் கோடி ரூபாய் பிரதமரின் பி.எம். கேர் நிதியில் உள்ளது. இந்திய மக்களால் கணக்கிடப்படாத, கணக்கு கேட்க முடியாத பணத்தில் இருந்தாவது ரூ 50 ஆயிரம் கோடியை ஆளுநர் அய்யா வாங்கி தந்தால் நன்றாக இருக்கும்.
சாவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும் கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்களும் இந்த சட்டசபையும் என கூறினார். அப்போது திடீரென ஆளுநர் ஆர்.என். ரவி அங்கிருந்து வெளிநடப்பு செய்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications