ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அதிரடி.. பொது மக்களுக்கு இனி நிம்மதி
ரேஷன் பொருட்களை வாங்க மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது
சென்னை: ரேஷன் கடை பணியாளர்களுக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை அறிவித்து உத்தரவிட்டுள்ளது, மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன..
இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே பல பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரமும் காக்கப்பட்டு வருகின்றன..
எங்களைப் பார்த்ததும் நடிக்காதீங்க- ரேஷன் கடை ஊழியர்களை எச்சரித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்
ஆய்வுகள்
மேலும், நியாய விலைக்கடைகள் சரியாக இயங்கி வருகின்றனவா என்ற நேரடி ஆய்வையும் அதிகாரிகள் மூலம் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.. எல்லாவற்றிற்கும் மேலாக, ரேஷன் கடைகள் குறித்த புது புது அறிவிப்புகள் அடிக்கடி வெளியாகி கொண்டே இருக்கிறது.. அந்த அறிவிப்புகள் சட்டசபைகளிலும், சில நேரம் அமைச்சர்களின் பேட்டிகளின் மூலம் வெளியாகிறது.. அந்த வகையில், நியாய விலைக் கடைகளில் கண் கருவிழி சரி பார்க்கும் முறை முன்னோட்டத் திட்டமாக செயல்படுத்தப்படும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி புது அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார்.
இன்ப அதிர்ச்சி
அதேபோல, கடந்த 10 நாட்களுக்கு முன்பும், நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை அறிவித்து, தமிழக அரசு இன்ப அதிர்ச்சி தந்திருந்தது.. அதன்படி, சென்னையில் உள்ள நியாயவிலை கடைகளில் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும், கிராமப்புறங்களில் உள்ள நியாயவிலை கடைகளில் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யும் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் தமிழக அரசின் சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.
சந்தோஷம்
மேலும், நகர்ப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யும் ஊழியர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.. மேலும், அரசின் இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அம்மாதம் வழங்கப்பட வேண்டிய விற்பனை தொகையில் இருந்து ஒரு சதவீதம் ஊக்கத்தொகையாக கூட்டுறவு நிறுவனங்கள் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
ராதாகிருஷ்ணன்
அந்தவகையில் இன்றும் ஒரு முக்கிய அறிவிப்பை கூட்டுறவு சங்கம் அறிவித்துள்ளது.. சென்னை திருவில்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் சார்பில் காமதேனு திருமண மண்டபத்தின் திறப்பு விழா, தேனாம்பேட்டை காமதேனு வளாகத்தில் நடைபெற்றது. திருமண மண்டபத்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.. பிறகு செய்தியாளர்களிடம் கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சொன்னதாவது:
உயிர்நாடி
கூட்டுறவுத் துறை, மக்களின் உயிர்நாடியாக திகழ்ந்து வருகிறது.. 4,000-க்கும் மேற்பட்ட கூட்டுறவு சொசைட்டிகள், 47 கூட்டுறவு வங்கி மற்றும் நகர்ப்புற வங்கிகள் இருக்கின்றன... கூட்டுறவு வங்கிகளில் மட்டும் 66 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மக்கள் வைப்புத் தொகை வைத்திருக்கிறார்கள்... 40 ஆயிரம் கோடி ரூபாய் நகைக் கடன் மற்றும் 10 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் என கூட்டுறவு வங்கியின் மூலமாக அரசு அளித்து வருகிறது. 35 ஆயிரம் ரேஷன் கடைகளை மாற்றி அமைக்க வேண்டி உள்ளது.. ஆனால், ஒரேயடியாக இவைகளை மாற்றி அமைப்பது கடினம்..
விளம்பரம்
அதனால், இன்னும் மூன்று மாதங்களில் படிப்படியாக மாற்றி அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்... ரேஷன் கடைகளில் வரும் பொது மக்களுக்கு, பணம் கொடுத்து பொருட்களை வாங்க வேண்டும் என்று பணியாளர்கள் கட்டாயப்படுத்தக்கூடாது... பொது மக்களே, தாமாக முன்வந்து வாங்குவதற்கான விளம்பரத்தை மேற்கொள்ள வேண்டுமே, தவிர, மக்களை பொருட்களை வாங்கும்படி கட்டாயப்படுத்தக் கூடாது. அதேபோல, ரேஷன் பொருட்கள் தவிர்த்து மற்ற பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்று சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டு உள்ளது" என்றார்.