400 இடங்களில் சிறப்பு முகாம்.. ஒரே நாளில் 1.25 பேருக்கு வேக்சின்.. சென்னை மாநகராட்சி புதிய சாதனை!
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் இன்று நடைபெற்ற 400 கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 1,25,147 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. முதல்முறையாக இவ்வளவு பேருக்கு சென்னையில் வேக்சின் அளிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு பக்கம் கொரோனா கேஸ்கள் சரிந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் வேக்சின் போடுவதும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1559 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 26 பேர் பலியாகி உள்ளனர்.தமிழ்நாட்டில் இதுவரை 34,814 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.
தமிழ்நாட்டில் இதுவரை 2,98,60,920 டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. 2,40,84,430 பேருக்கு ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. 57,76,490 பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. இன்று இதுவரை 3,99,931 பேருக்கு வேக்சின் போடப்பட்டள்ளது.

இன்று
இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் இன்று நடைபெற்ற 400 கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 1,25,147 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவின்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் பெண்கள் மற்றும் காசநோய் பாதித்த நபர்களை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

தடுப்பூசி
மேலும், குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 25.08.2021 வரை 25,94,016 முதல் தவணை தடுப்பூசிகள், 11,22,132 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 37,16,148 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

முகாம்
அதனைத் தொடர்ந்து, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 1 இலட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி மாநகராட்சியின் சார்பில் ஒரு வார்டிற்கு 2 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் என மொத்தம் 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் இன்று (26.08.2021) நடத்தப்பட்டது.

எத்தனை
இன்று நடைபெற்ற 400 தடுப்பூசி சிறப்பு முகாம்களில் மாநகராட்சி மண்டல அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் மக்களுக்கு வேக்சின் கொடுக்கப்பட்டது. இதன் மூலாம் இன்று சென்னை மாநகரில் வசிக்கும் 125,147 நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது சென்னை மாநகராட்சியில் நாளொன்றிற்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி எண்ணிகைகளில் அதிகபட்சமானது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications