டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் மாற்றப்படவே இல்லை.. கவனித்தீர்களா?
சென்னை: 'ஹால்டிக்கெட்' குளறுபடியால் குரூப்-2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் அன்றைய தினம் இரவே காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதாகவும், வேறொரு புதிய அதிகாரி அந்த இடத்துக்கு நியமனம் செய்யப்பட்டிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வந்தன. ஆனால் அது எதுவும் உண்மை இல்லை என்பது நேற்றைய டிஎன்பிஎஸ்சி அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான தேர்வும், குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான தமிழ்த் தகுதித்தாள் தேர்வும் கடந்த பிப்ரவரி 8-ந்தேதி நடைபெறுவதாக அறிவித்து இருந்தது. ஆனால் பிப்ரவரி 8ம் தேதி அன்று காலையில் நடந்த குரூப்-2 ஏ பதவிகளுக்கான பாடங்களுக்கான தேர்வின்போது, தேர்வு எழுத வந்திருந்தவர்களுக்கு 'ஹால்டிக்கெட்' ஒதுக்கியதில் குளறுபடி ஏற்பட்டது.

இதனால் அன்றைய தினம் நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தேர்வை நடத்தக் கூடிய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. ஆனால் பல்வேறு மாவட்டஙகளில் தேர்வு எழுதியவர்களுக்கு தேர்வுஎழுதி முடித்த பின்னரே ரத்து செய்யப்பபட்ட அறிவிப்பு தெரியவந்தது. சென்னையில் நடந்த குளறுபடி தான் தேர்வுகள் ரத்து செய்யப்பட காரணமாக அமைந்தது.
மார்ச் 15-ந்தேதி தேர்வு நடைபெறும்
ரத்து செய்யப்பட்டிருந்த குரூப் 2 தேர்வுகள், மார்ச் 15-ந்தேதி காலை மற்றும் பிற்பகலில் நடத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பையும் வெளியிட்டது. இந்த நிலையில் ஹால்டிக்கெட் குளறுபடி விவரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து இருந்தது. அதன்படி, விசாரணை நடத்திய டிஎன்பிஎஸ்சி நேற்று செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டது.
டிஎன்பிஎஸ்சி விளக்கம்
அதில் கூறுகையில், "8.2.2026 அன்றைய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில், 2 உதவிப்பிரிவு அலுவலர் மற்றும் நிரலர்கள், 2 பிரிவு அலுவலர்கள் மற்றும் ஒரு சார் செயலாளர் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.
ஒழுங்கு நடவடிக்கை
மேலும் துணைச் செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இனி வருங்காலங்களில் இந்த தவறுகள் நிகழாதபடி கூடுதலான வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மாற்றமில்லை
இந்த விவகாரம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் அன்றைய தினம் இரவே காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதாகவும், வேறொரு புதிய அதிகாரி அந்த இடத்துக்கு நியமனம் செய்யப்பட்டிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வந்தன. ஆனால் அது எதுவும் உண்மை இல்லை என்பது டிஎன்பிஎஸ்சியின் அறிக்கையில் இருந்த தகவல்களை பார்க்கும் போது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications