தேர்வு எழுத முடியாமல் போய்டும்! மறக்காம இதை பண்ணிடுங்க! குரூப் 2 தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி அட்வைஸ்
சென்னை: குரூப் 2 முதன்மை தேர்வுக்கு கட்டணம் செலுத்தவில்லை என்றால் அனுமதி சீட்டு தரப்படாது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. குரூப் 2 தேர்வுக் கட்டணம் செலுத்த வரும் 18 ஆம் தேதி கடைசி நாள் என்றும், இதற்காக கடைசி நாள் வரை காத்திருக்காமல் தேர்வுக் கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.
தமிழக அரசில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை உரிய அறிவிப்பினை வெளியிட்டு டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது.

அந்த வகையில், தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு உதவியாளர் சென்னை மாநகர காவல் தனிப்பிரிவு உதவியாளர் உள்பட 507 இடங்களுக்கும், குரூப் 2 ஏவில் நேர்முக உதவியாளர், கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளர், உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர் என 48 துறைகளில் காலியாக உள்ள 1820 பணியிடங்கள் என மொத்தம் 2,540 பணியிடங்களுக்கு குரூப் 2 தேர்வுகள் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்வை சுமார் 5 லட்சம் தேர்வர்கள் எழுதிய நிலையில், கடந்த 13 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு நடைபெற்று 57 வேலை நாட்களில் முடிவுகள் வெளியிடப்பட்டது. குரூப்-2, 2ஏ முதல் நிலை தேர்வு முடிவில் 29,809 தேர்வர்கள் தேர்ச்சி பெற்று இருப்பது தேர்வு முடிவு புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரிய வந்து இருக்கிறது. இதில் குரூப்-2 பதவிகளுக்கு 7,987 பேரும், 2ஏ பதவிகளுக்கு 21 ஆயிரத்து 822 பேரும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தக் கட்டமாக முதன்மை தேர்வை எதிர்கொள்ள வேண்டும். அந்த வகையில் 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி கூறியது. குரூப்-2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான தமிழ் தகுதித்தாள் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
மேலும் குரூப்-2ஏ பதவிகளுக்கு கொள்குறி வகையிலான கணிணி வழி பொதுப்பாடத் தேர்வு பிப்ரவரி மாதம் 8-ம் தேதியும், குரூப்-2 பதவிகளுக்கு விரித்துரைக்கும் வகையிலான பொதுப்பாடத் தேர்வு பிப்ரவரி 23 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 2 முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றவர்கள் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இதற்கு இன்னும் 2 நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், கட்டணம் செலுத்தவில்லை என்றால் அனுமதி சீட்டு தரப்படாது என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. கடைசி நாள் வரை காத்திருக்காமல் தேர்வுக் கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும் எனவும் டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி கூறியிருப்பதாவது:-
தேர்வுக் கட்டண சலுகை கோராத தேர்வர்கள், முதன்மை தேர்வுக் கட்டணத்தை செலுத்தவில்லையெனில், அவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்படாது. எனவே தேர்வர்கள் கடைசிநாள் வரையில் காத்திருக்காமல் தேர்வுக்கட்டணத்தை உடனே செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 47 சதவீதம் தேர்வுக்கட்டணத்தை செலுத்தியுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications