நோயால் அவதிப்படும் மித்ரா...மருந்துக்கு வரி விலக்கு கேட்டு நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் கடிதம்
உயிர் காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்யும் போது அதற்கான ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான உயிர் காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்யும்போது, விதிக்கப்படும் சுங்கவரி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மற்றும் இதர வரிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைகளுக்கு மரபணு சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கான மருந்தின் விலை 16 கோடியாக உள்ளதாக தனது கடிதத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் 100 பேர் வரை முதுகெலும்பு தசை செயலிழப்பு நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
மருந்தின் விலை அதிகமாக இருப்பதால் பலர் சிகிச்சை செலவை மேற்கொள்ள சிரமப்படுகிறார்கள். இந்த மருந்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும்போது சுங்கவரி மற்றும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.

அண்மையில் ஒரு குழந்தைக்காக மருந்தை இறக்குமதி செய்யும் போது மத்திய அரசு வரியை விலக்கியது. எனவே உயிர் காக்கும் மருந்துகள் இறக்குமதி செய்வதற்கான சுங்கவரி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நிதித் துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சருக்கு எழுதிய கடிதத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள மு.க ஸ்டாலின், #SpinalMuscularAtrophy என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை மித்ராவுக்கு அதற்கான மருந்துகள் மீது விதிக்கப்பட்டுள்ள வரி விலை காரணமாக சிகிச்சையில் ஏற்பட்டுள்ள இடர்களை அறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
சிகிச்சைக்கு ரூ.16 கோடி தேவைப்படும் இந்நோயால் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 90-100 குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் இப்படி அல்லற்படக் கூடாது. மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிக்க - கொள்கை முடிவு எடுக்க வலியுறுத்தி மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications