சல்லி சல்லியாய் உடைந்த எடப்பாடி கோட்டை! 10 இல்ல.. மொத்த தோல்வி பழனிசாமி! அதிமுகவில் புரட்சிப் படை!
சென்னை: தமிழக அரசியலில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ள அதிமுகவில் தற்போது உள்கட்சி அதிருப்தி வெளிப்படையாக வெடிக்க தொடங்கியுள்ளது. தொடர்ந்து 11 தேர்தல் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் மத்தியில் கடும் அதிருப்தி உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரை ராஜினாமா செய்ய வைத்து விட்டு, புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக 59 இடங்களிலும், அதிமுக வெறும் 47 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றது.

பல தொகுதிகளில் அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதோடு, டெபாசிட் கூட இழந்தது கட்சித் தொண்டர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே அதிமுக தொடர்ந்து தேர்தல் தோல்விகளை சந்தித்து வருகிறது.
அதிமுக உள்கட்சி மோதல்
நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல்கள் என தொடர்ந்து 11 தொடர் தோல்விகளால் பின்னடைவை சந்தித்த நிலையில், தற்போது சட்டப்பேரவைத் தேர்தலிலும் கட்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்சியின் எதிர்காலம் குறித்து அதிமுக நிர்வாகிகள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது. இதற்கிடையில், கட்சியில் ஒருங்கிணைப்பு அவசியம் என்றும், அனைவரையும் இணைத்தே கட்சியை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்திய ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சம்பவமும் தற்போது மீண்டும் பேசப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி தோல்வி
அந்த முடிவுகளே கட்சியை பலவீனப்படுத்திவிட்டதாக சில நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கூட கிடைக்காத நிலை ஏற்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு அரசியல் பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை தற்போது கட்சிக்குள் வலுப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
சி.வி.சண்முகம்
மற்றொரு பக்கம், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்து ஆட்சியில் பங்கேற்கலாம் என்ற யோசனையும் அதிமுகவுக்குள் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், தவெக தரப்பில் அதிகாரப்பூர்வ அழைப்பு இல்லாமல் ஆதரவு அளிப்பது சரியாக இருக்காது என்று எடப்பாடி பழனிசாமி மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக தோல்வி
அதே நேரத்தில், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் வகையிலும் திரைமறைவு பேச்சுகள் நடந்ததாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. உதயநிதி ஸ்டாலின், தவெக ஆட்சி அமைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாகவும், அதன் அடிப்படையில் திமுக ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கும் யோசனை பேசப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் திமுக ஆதரவுடன் ஆட்சி அமைப்பதை அதிமுகவின் ஒரு பகுதி தலைவர்கள் ஏற்க மறுத்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெகவுக்கு ஆதரவு
இதனிடையே, கட்சித்தாவல் தடை சட்டம் பாதிக்காத வகையில், அதிமுக எம்எல்ஏக்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தவெகவுக்கு ஆதரவு அளிக்கலாம் என்ற யோசனையும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக சில முக்கிய எம்எல்ஏக்கள் தனியாக ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை எம்.ஆர்.சி.நகரில் சி.வி.சண்முகம் இல்லத்தில் நடைபெற்ற ரகசிய ஆலோசனை கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஈபிஎஸ் ராஜினாமா
கட்சியை மீண்டும் கட்டமைக்க புதிய தலைமையைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அதிமுகவில் அடுத்த சில நாட்களில் பெரிய அரசியல் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக பேசிக்கொண்டு இருக்கின்றன. இடையில் சசிகலா உள்ளிட்டோர் தங்கள் ஆட்டத்தை ஆரம்பிக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications