ஒரே கூப்பில் திமுக - அதிமுக.. தமிழக அரசியல் வரலாற்றில் அதிசயம்! ஒட்டுமொத்தமாக கதையை முடித்த விஜய்!
சென்னை: 1967ஆம் ஆண்டுக்கு பிறகு திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆண்டு வந்தன. அண்ணா, எம்ஜிஆர்,கலைஞர், ஜெயலலிதா, ஸ்டாலின் என யாராவது ஒருவர் ஆட்சியைப் பிடித்தால் எதிர்க்கட்சி வரிசையில் அதிமுக அல்லது திமுக தான் இருக்கும். இந்த நிலையில் தமிழக அரசியல் வரலாற்றில் முதன் முறையாக தமிழக வெற்றிக் கழகத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் இரு கட்சிகளையும் ஒரே வரிசையில் அமர வேண்டிய நிலைக்கு திமுகவும் அதிமுகவும் தள்ளப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருந்தாலும் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதன் மூலம் தமிழக அரசியலில் புதிய மாற்றத்தின் மையமாக விஜய் மாறினார்.

ஆனால் ஆட்சியை அமைக்க தேவையான 118 உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால், அடுத்த சில நாட்கள் தமிழக அரசியல் பரபரப்பின் உச்சத்தை தொட்டது. ஆளுநரை பலமுறை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய், பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க கடும் முயற்சிகளில் ஈடுபட்டார்.
விஜய்
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய சில கட்சிகளும் இறுதியில் விஜய்க்கு ஆதரவு அளிக்க முன்வந்ததால், தவெக தேவையான எண்ணிக்கையை எட்டியது. இந்த அரசியல் குழப்ப சூழலில்தான் திமுக - அதிமுக இடையே மறைமுக பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல்கள் பரவின. அதிமுக ஆட்சியமைக்க திமுக வெளியிலிருந்து ஆதரவு தரலாம் என்றும், எடப்பாடி பழனிசாமி முதல்வராகலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம்
சில தேசிய ஊடகங்களிலும் இதுகுறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகின. புதுச்சேரியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்ட சம்பவமும் இந்த தகவல்களுக்கு மேலும் வலு சேர்த்தது. ஆனால் திமுக தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த சமிக்ஞையும் வரவில்லை. அதிமுகவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது அரசியல் ரீதியாக சரியாக இருக்காது என்ற நிலைப்பாட்டில் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
திமுக, அதிமுக
இருப்பினும், "விஜய் ஒருமுறை ஆட்சியில் அமர்ந்துவிட்டால் அடுத்த பல ஆண்டுகள் அவரை அகற்றுவது கடினமாகிவிடும்" என்ற அச்சம் இரண்டு கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்களிடமும் இருந்ததாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கிடையில், தவெகவுக்கு ஆதரவு அளிப்பதில் விசிக எடுத்த முடிவு மிக முக்கிய திருப்பமாக அமைந்தது. திருமாவளவன் தலைமையிலான விசிக ஆதரவு அளித்ததும், விஜயின் ஆட்சியமைப்பு முயற்சிக்கு இறுதி முத்திரை பதிந்தது.
தமிழக அரசியல்
பின்னர் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் மற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் விஜய் ஆட்சியை அமைக்கும் நிலைக்கு வந்தார். இதன் மூலம் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. 1967ஆம் ஆண்டு அண்ணா தலைமையிலான திமுக காங்கிரஸை தோற்கடித்து ஆட்சியை பிடித்தது. 1977ஆம் ஆண்டு எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக திமுகவை வீழ்த்தி ஆட்சிக்கு வந்தது.
திராவிடக் கட்சிகள்
அதேபோல் 2026ஆம் ஆண்டு விஜய் தலைமையிலான தவெக, இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தையும் ஒரே நேரத்தில் உடைத்து புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது. இதுவரை தமிழக சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியாக ஒருவர் இருந்தால், எதிர்க்கட்சியாக திமுக அல்லது அதிமுக இருக்கும் என்பது வழக்கமாக இருந்தது.
விஜய் யுகம்
ஆனால் இப்போது அந்த இரு கட்சிகளும் ஒரே பக்கத்தில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது சாதாரண அரசியல் மாற்றம் அல்ல; தமிழக அரசியலின் புதிய அத்தியாயம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். திரை உலகில் இருந்து அரசியலுக்கு வந்த பலர் இருந்தாலும், முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடித்து அரசியல் வரலாற்றையே மாற்றியிருக்கிறார் விஜய். அதனால் தான் தற்போது தமிழக அரசியல் முழுவதும் "விஜய் யுகம்" தொடங்கிவிட்டது என்ற பேச்சு அதிகமாக ஒலித்து வருகிறது.












Click it and Unblock the Notifications