நேற்று கூட அந்த நபர் மருத்துவரிடம்.. கிண்டி விவகாரத்தில் காவல் ஆணையர் அருண் புதிய தகவல்
சென்னை: சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மூத்த மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். அப்போது கிண்டி மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை புற்றுநோய் துறை தலைவராக இருப்பவர் மருத்துவர் பாலாஜி. இவர் காலை பணியில் இருந்தபோது பெருங்களத்தூரைச் சேர்ந்த 25 வயது இளைஞர் விக்னேஷ் என்பவர் பாலாஜியை பார்க்க சென்றுள்ளார். அப்போது விக்னேஷ் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பாலாஜியை சரமாரியாக தாக்கினார்.

இதில் சுமார் ஏழு இடங்களில் படுகாயமடைந்த பாலாஜிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. முக்கியமாக மருத்துவர்கள் மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மருத்துவர்களின் பாதுகாப்புக்கு அரசு பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தன் எக்ஸ் தள பக்கத்தில், இந்த வழக்கு குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியிருந்தார். இதுகுறித்து விக்னேஷ் உள்ளிட்ட இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளனர். விக்னேஷின் உறவினர் உள்பட மேலும் சிலரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. தனது அம்மாவுக்கு முறையாக சிகிச்சை அளிக்காத ஆத்திரத்தில், நண்பர்களுடன் இணைந்து பாலாஜியை கத்தியால் குத்தியதாக விக்னேஷ் கூறியுள்ளார்.
சம்பவம் நடந்த கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அருண், அரசியல் விமர்சனங்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. இந்த மருத்துவமனையில் முதல்முறையாக இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் தன் அம்மாவின் சிகிச்சைக்காக கடந்த ஆறு மாதங்களாக மருத்துவமனையில் உள்ளார். நேற்று கூட அதே மருத்துவரிடம் பேசியிருக்கிறார்.
இப்போதுதான் புகாரளித்துள்ளனர். விரைவில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகரத்தில் ராஜீவ் காந்தி, கீழ்பாக்கம், ஸ்டான்லி, ஓமந்தூரார் உள்ளிட்ட 4 அரசு மருத்துவமனைகளில் தனித்தனி காவல்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ உள்ளிட்ட 30 காவலர்கள் இருக்கிறார்கள். முன்பு அவை ஓபி நிலையமாக மட்டுமே செயல்பட்டு வந்தது.
காவல்நிலையம் இல்லாத மருத்துவமனைகளில் ஓபி நிலையம் செயல்படுகிறது. கிண்டி அரசு மருத்துவமனையிலும் ஓபி நிலையம் அமைத்து போலீஸ் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடக்கவில்லை. என்று கூறினார்.
இந்நிலையில் மற்ற சம்பவத்துக்கும், இதற்கும் வித்தியாசம் உள்ளது. எனவே எந்தப் பிரிவில் வழக்கு பதியப்படும். இதற்கென தனிப்பிரிவு ஏதாவது பதிவு செய்யப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அருண், இது கொலை முயற்சி வழக்கு தான். சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications