கொரோனா வார்டில் நெகிழ்ச்சி.. 80 வயது முதியவருக்கு ஹேப்பி பர்த்டே அப்பா என கேக் வெட்டிய டாக்டர்
சென்னை: சென்னையில் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் 80 வயதான கொரோனா நோயாளிக்கு டாக்டர்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர். இதனால் முதியவர் நெகிழ்ச்சி அடைந்தார்.
கொரோனாவால் பாதிக்கப்படும்போது முதியவர்கள், இளைஞர்கள், என அனைத்து தரப்பினரும் மன உளைச்சலால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இதனால் கொரோனா வார்டுகளிலும் அவர்களுக்கு தேவையான மன நல ஆலோசனையும் வழங்கப்படுகிறது.
மேலும் அவர்களுக்கு யோகா, தெரபிக்கள், விளையாட்டு உள்ளிட்டவைகளும் வழங்கப்படுகின்றன. கொரோனா பாதித்தோர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குக் கூட செல்வதாக தகவல்கள் கிடைக்கின்றன.

டாக்டர்கள்
இதை மனதில் கொண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அனைவருக்கும் மன நல ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும் மன அமைதி பெற யோகாப் பயிற்சிகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. மேலும் கொரோனா சிகிச்சை வார்டுகளில் சிகிச்சை பெறும் முதியவர்களை உற்சாகம் செய்யக் கூடிய வகையில் நடவடிக்கைகளை டாக்டர்கள் மேற்கொள்கிறார்கள்.

முதியவர்
அந்த வகையில் சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் 80 வயது முதியவருக்கு டாக்டர்கள் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர். இது மற்ற நோயாளிகளுக்கும் அந்த முதியவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 80 வயதான முதியவர் கிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

நலம் விசாரிப்பு
அவர் சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 6-ஆம் தேதி ஒவ்வொரு வார்டாக சென்று மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் நாராயணசாமி, சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அந்த முதியவருக்கு நேற்றைய தினம் பிறந்த நாள் என்பதை தெரிந்து கொண்டார்.

ஆங்கிலம்
இதையடுத்து முதியவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க முயன்ற அந்த டாக்டர், பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த ஒரு கேக்கை ஆர்டர் செய்தார். பின்னர் நேற்று காலை அந்த முதியவரிடம் தான் ஆர்டர் செய்த கேக்கை காண்பித்து பிறந்தநாளை கொண்டாட வைத்தார். அப்போது முதியவர், எனது பிறந்தநாளை நான் இது போல் கொண்டாடியதே இல்லை என அந்த முதியவர் கண்ணீர் மல்க டாக்டருக்கு நன்றி கூறி வாழ்த்தினார்.












Click it and Unblock the Notifications