“விஜய்க்கு வந்த மிரட்டல்.. ஸ்டாலினிடம் ராகுல் காந்தி சொன்ன வார்த்தை".. அதிர விடும் சங்கத்தமிழன்
சென்னை: "ஆடிட்டர் குருமூர்த்தியும் விஜய்யும் தனியாகச் சந்தித்து நேருக்கு நேர் பேசி இருக்கிறார்கள். குருமூர்த்தி, விஜய்யை மிரட்டி இருக்கிறார். பாஜக உடன் கூட்டணிக்கு வரவேண்டும், இந்தப் பிரச்சனையில் இருந்து காப்பாற்றுகிறோம் எனக் கூறி இருக்கிறார். ஆனால், விஜய் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை" என விசிக இளைஞரணி செயலாளர் சங்கத்தமிழன் நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கடும் கூட்ட நெரிசலால் 41 பேர் பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று வீடியோ வெளியிட்டு அதில் பல்வேறு விவகாரம் தொடர்பாக பேசி இருந்தார்.

41 பேரின் உயிர் பலிக்கு காரணமான தவெக தலைவர் விஜய் மற்றும் கூட்ட ஏற்பாட்டாளர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், விசிக இளைஞரணி செயலாளர் சங்கத்தமிழன் நமது ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
சங்கத்தமிழன் பேசுகையில், "விஜய் கொடூரமான மனிதன் இல்லை. விஜய் யதார்த்தமான ஆள் தான். விஜய் தமது வாழ்க்கையில் பெரிய கஷ்டங்களை எல்லாம் சந்திக்கவில்லை. இன்றைக்கு சூப்பர்ஸ்டார் லெவவில் இருக்கிறார். விஜய்யின் இலக்கு முதலமைச்சர் பதவி. தன்னை நம்பி வந்த குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் இறந்து போனதற்கான துக்கத்தை தமது பேச்சில் பகிர்ந்து கொள்ளவே இல்லை. நான் இங்கேதான் இருக்கிறேன், முடிந்தால் வந்து தொட்டுப் பாருங்க என்ற தொனியில் பேசுவது எவ்வளவு அயோக்கியத்தனமான சொல்லாடல்.
திரைப்படத்தில் போக்கிரியாக இருக்கலாம். இப்போது அரசியலில் போக்கிரியாகிவிட்டார். இந்திய அரசியலிலேயே இப்படி மிகப்பெரிய சம்பவம் நடக்கவே இல்லை. அல்லு அர்ஜுன் படம் பார்க்க வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழப்பு ஏற்பட்டது. அந்த அரசாங்கம் உடனே அல்லு அர்ஜுனை கைது செய்து உள்ளே வைத்தது. திமுக அரசு ஏன் பயப்படுகிறது என்று தெரியவில்லை. இரும்பு மனிதனாகச் செயல்பட வேண்டும் என ஸ்டாலின் எனப் பெயர் வைத்தார் அவரது தந்தை. அப்படி என்றால் விஜய்யை தூக்கி உள்ளே வையுங்கள். அவருக்கு அரசியல் வகுப்பெடுங்கள். கைது செய்து நீதிபதி முன்பு நிறுத்தி அவரை அரசியல்படுத்துங்கள்.
ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் சித்தாந்தம் கலவரம் உருவாக்கி, மக்களை தன்வயப்படுத்துவது. அந்த நோக்கத்தில் விஜய் செயல்படுகிறார். மக்கள் விஜய்க்கு மிகப்பெரிய இடத்தை கொடுத்திருக்கிறார்கள். உயிரிழந்த 41 பேர் யாரை நம்பி வந்தார்கள்? அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு விஜய்க்கு இல்லையா? பாதுகாப்பை விஜய் நெறிப்படுத்தவில்லை. இளைஞரணி, தொண்டரணிக்கு இன்னும் பொறுப்பாளர்களையே நியமிக்கவில்லை.
தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாகி விட்டார். புஸ்ஸி ஆனந்தை போலீசார் நெருங்கிவிட்டார்கள். எங்களுக்கும் உளவுத்துறையில் ஆள் இருக்கிறது. இரவே புஸ்ஸி ஆனந்தை கைது செய்வார்கள். ஆதவ் அர்ஜுனாவை நாளை கைது செய்துவிடுவார்கள். விஜய்யை மட்டும் விட்டு வைத்திருக்கிறார்கள்.
ஆடிட்டர் குருமூர்த்தியும் விஜய்யும் தனியாகச் சந்தித்து நேருக்கு நேர் பேசி இருக்கிறார்கள். குருமூர்த்தி, விஜய்யை மிரட்டி இருக்கிறார். பாஜக உடன் கூட்டணிக்கு வரவேண்டும், இந்தப் பிரச்சனையில் இருந்து காப்பாற்றுகிறோம் எனக் கூறி இருக்கிறார். ஆனால், விஜய் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை, ஆனால் பாஜக அவரை மடக்கிவிடும்.
பாஜக ஏன் டெல்லியில் இருந்து ஒரு குழுவை அனுப்புகிறது? சொல்லப்போனால், விஜய் பேசியது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடன் தான். இருவரும் பேசியது தெரிந்ததும் பாஜக எம்.பிக்கள் குழுவை அனுப்பிவிட்டது. எந்தக் காரணத்தைக் கொண்டும் விஜய்யை கைது செய்துவிடாதீர்கள் என தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் சொன்னதாக தகவல் வந்துள்ளது." எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications