Newsmakers 2018: எதை எடுத்தாலும் பரபரப்புதான்.. மறக்க முடியாத பதட்ட நாயகன்.. எச். ராஜா!
சென்னை: 2018-ல் நம்மை பதட்ட நிலையிலேயே வைத்திருந்தவர்களில் மிக முக்கியமானவர் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாதான்.
மாநில பாஜகவின் வளர்ச்சியில் இவரது பங்கு என்ன என்பதும், அதற்காக எச்.ராஜா எந்தமாதிரியான முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்தார் என்பதும் நமக்கு தெரியாது (பாஜகவுக்கும் தெரியாது).
ஆனால் எங்க தொட்டால் நம் மக்களுக்கு கோபம் வருமோ, யாரையெல்லாம் சொன்னால் ரத்தம் வெறிகொண்டு கொதிக்குமோ அதை மட்டும் வைத்து அரசியல் செய்து வருகிறார். மதரீதியாக மக்களை பிளவுபடுத்துவதை நோக்கத்தையே எச்.ராஜா எப்போதும் கையாள்வதே அதற்கு காரணம்.
குளிர் காய்பவர் ராஜா
வாயை திறந்தாலோ வரலாற்றைத் திரித்துக் கூறுவது... எந்த தலைவரானாலும் ஏக வசனத்தில் பேசுவது.. எல்லோருக்கும் ஆத்திரமூட்டும் வகையில் பேசி சண்டைக்கு இழுப்பது.. எப்படியாவது மோதல் ஏற்பட்டு விடுமா என்றே ஏங்குவது... பிறகு அதையே ஊதிப் பெரிதாக்கி மத, இன ரீதியாக குளிர்காய்வது என்றே எச்.ராஜாவின் செயல்பாடுகள் அமைந்திருந்தன.
தரக்குறைவான பதிவுகள்
தேசிய கட்சியின் செயலாளராக எச்.ராஜாவை நியமித்திருப்பதே இதற்காகத்தானா என்று மற்றவர்களை எண்ண வைத்தவர். இவரது ட்வீட்கள் இந்த வருடம் பெரிதாக பேசப்பட்டன. பிரதமர் மோடியை யார் திட்டினாலும், விமர்சித்தாலும், அன்றைய தினம் அவர்களை பற்றி தரக்குறைவாக ட்வீட்களை பதிவிடுவார்.
அட்மின் போட்ட ட்வீட்
விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது எச்.ராஜா நீதிமன்றத்தை இழிவாக பேசியதும், பிறகு அந்த குரல் தன்னுடையது இல்லை என்று வாதிட்டதும், இதனை அடுத்து கோர்ட்டுக்கு போய் மன்னிப்பு கேட்டு விட்டு வந்ததையும் நாடறியும். ஒரு போஸ்ட் போட்டு விட்டு அது நான் போடவில்லை, அட்மின் போட்டது என்று கூறியதைத் தொடர்ந்து இவருக்கு அட்மின் ராஜா என்ற செல்லப் பெயரும் வந்து ஒட்டிக் கொண்டது.
ஜோசப் விஜய்
கமல் மீது குறை சொல்வது, வைகோவை அநாகரீகமாக திட்டுவது, நடிகர் விஜய்யின் மதத்தை இழுத்தது என்று இவரது செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆயிரம் பேர் மீது குறைகளை அவர் சொல்லி கொண்டே இருந்தாலும், என்னவோ ஐஜி பொன்.மாணிக்கவேல் மீது மட்டும் அளவுகடந்த அன்பு வைத்திருப்பதன் காரணம் தெரியவில்லை. அதே நேரத்தில் இந்து சமய அறநிலையத்துறை மீது காட்டும் வெறுப்புணர்ச்சியும் குறையவில்லை.
மக்கள் அதிருப்தி
முட்டி மோதி தமிழக பாஜகவை தமிழிசை சவுந்தராஜன் மேலே கொண்டு வந்து நிறுத்த முயற்சி எடுத்தால், அதனை ஒரே ஒரு ட்வீட் போட்டு காலி செய்து விடுவதில் முக்கிய பங்கு எச்.ராஜாவுக்கு இருக்கிறது. இதுவரை எந்த காரணத்திற்காகவும் பாஜக தலைமை அவரை கண்டித்தே இல்லை எனினும் மக்கள் மீது நிறையவே இந்த வருடமும் அதிருப்தியை சம்பாதித்தவர்களுள் எச்.ராஜாவும் ஒருவர் ஆவார்.