ஆளுநர் மீது இனவெறி தாக்குதல்.. உதய் மீது என்ன நடவடிக்கை?.. ஹெச்.ராஜா சரமாரி கேள்வி
சென்னை: தமிழக துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடியது தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்பட்டதற்காக ஆளுநரின் மீது இனவெறி தாக்குதலை நடத்திய முதல்வர் ஸ்டாலின் தனது வாரிசின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் அண்மையில் தமிழ்நாடு அரசின் திட்டம் மற்றும் செயலாக்கத் துறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். தமிழ்நாடு அரசுத்துறை ஆலோசனைக் கூட்டங்களிலும், தமிழ்நாடு அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது என முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது, உதயநிதி தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்களை மீண்டும் பாடுமாறு கேட்டுக் கொண்டார். இதனால் தமிழக அரசு விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து உதயநிதி கூறுகையில், தமிழ்த் தாய் வாழ்த்தை யாரும் தவறாக பாடவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது திடீரென மைக்கில் கோளாறு ஏற்பட்டு 2, 3 இடங்களில் அவர்கள் என்ன பாடுகிறார்கள் என யாருக்கும் கேட்காமல் போய்விட்டது. அதனால்தான் அவர்களை மீண்டும் முதலில் இருந்து பாட வைத்தோமே தவிர, அவர்கள் தவறாக பாடினார்கள் என்பதற்காக அல்ல என விளக்கினார். இதையடுத்து அந்த சர்ச்சைக்கு உதயநிதி முற்றுப்புள்ளி வைத்தார்.
சமீபத்தில் ஆளுநர் கலந்துகொண்ட விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்தில் ஒரு வரியை தவிர்த்துவிட்டு பாடியது பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையில் தனது வாரிசான உதயநிதி ஸ்டாலின் மீது முதல்வர் ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ஹெச் ராஜா கூறுகையில், தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடி தமிழ் மக்களை அவமதித்துவிட்டார் என ஆளுநரின் மீது இனவெறி தாக்குதலை நடத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது வாரிசின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?. தமிழ்ப்பற்று என்பதெல்லாம் வெறும் அரசியல் மேடைப்பேச்சிற்கு மட்டும் தானா?.
தமிழக துணை முதல்வர் பங்கேற்கும் அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறுடன் பாடுமளவிற்கு தான் அரசு விழாவிற்கான முன்னேற்பாடுகள் நடக்கின்றனவா?. ஒருவேளை தமிழினம் போற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தை வேண்டும் என்றே தவறாகப் பாட வைத்து, தமிழக மக்கள் மீதான தனது காழ்ப்புணர்வைத் தீர்த்துக் கொண்டதா அறிவாலயம்.
அல்லது திராவிட மாடல் அரசின் உண்மை முகத்தை உணர்ந்த மக்கள் அவர்களைத் துரத்தியடிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல், திட்டமிட்டு தமிழ் கலாச்சாரத்தை அவமதித்ததா திமுக? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications