இந்தியாவில் பாஜக ஆதரவு இல்லாமல் இனி யாரும் ஆட்சியமைக்க முடியாது - எச். ராஜா
மதுரை: லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபைத் தொகுதிகளில் பாஜகவின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று மதுரை வந்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டசபைத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி வாரியாக பாஜகவின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்கும் ஆலோசனை வழங்குவதற்கும் தான் நான் வந்திருக்கிறேன்.
மூன்று நாட்களில் நாள்தோறும் இரண்டு சட்டசபைத் தொகுதிகள் என ஆய்வுப் பணிகள் நடைபெறும் என்றார்.
மத்திய பாஜக அரசு கொரோனா காலத்தில் நாடு முழுவதும் 80 கோடி மக்களுக்கு, நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி ஒரு கிலோ பருப்பு வீதம் மாதமொன்றுக்கு மாநில அரசுகளின் வழியாக 100 சதவிகிதம் மத்திய அரசின் மானியத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று விவசாயிகளுக்கு ரூபாய் 6000 வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பயன்களைப் பெற்ற பொதுமக்களை பாஜகவின் ஆதரவு வாக்காளர்களாக மாற்றுகின்ற பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது மதுரை மற்றும் திருச்சி லோக்சபா தொகுதிக்கு நான் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளேன் என்றார்.
ஷாக்கிங்.. பாஜகவில் சேர.. கத்தி அரிவாளுடன் வந்த ரவுடி கும்பல்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்!
ஜெயக்குமார், செல்லூர் ராஜூ
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு எச். ராஜா பதிலளித்தார். அப்போது அவர், அதிமுகவினர் எல்லை மீறி பேசுவது கூட்டணிக்குள் பிரச்சினையை ஏற்படுத்தும். அமைச்சர்கள் ஜெயக்குமாரும், செல்லூர் ராஜூவும் பேசுவது சரியல்ல என்று கூறினார். தமிழக அரசை நான் விமர்சிப்பது கிடையாது, தோழமை சுட்டுதலோடு குறைகளை மட்டுமே சொல்கிறேன்.
தமிழக அரசுக்கு கெட்ட பெயர்
கூட்டணியில் குழப்பம் விளைவிப்பதற்காக அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் எல்லை மீறி பேசுவதை நான் கண்டிக்கிறேன். அதனை வைத்து சிலர் சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். தமிழக அரசுக்கு எந்தவிதத்திலாவது கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் இருக்கிறார்கள்.
பாஜக தயவு தேவை
வெறும் 2 சதவிகித ஓட்டு வாங்கிய திரிபுராவில் பாஜக 50 சதவிகித வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. அந்த அடிப்படையில் இனி இந்தியா எங்கும் பாஜகவின் ஆதரவின்றி எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்பதுதான் எனது கருத்து. பிரதமரை தலைவராக கொண்ட பாஜகவை இழிவுபடுத்துவதும் பிரதமரை இழிவுபடுத்துவதும் இரண்டும் ஒன்றுதான் என்று கூறினார் எச். ராஜா.
பதிலளிக்க விரும்பவில்லை
நீட் மற்றும் தேர்வு குறித்த ராகுல் காந்தியின் கேள்வி பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் சொன்ன எச். ராஜா, ராகுல் காந்தி போன்ற அரைவேக்காடுகள் அரை இத்தாலியர்களின் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்க விரும்பவில்லை என்றும் கூறினார்.
அதிமுக பாஜக வார்த்தை போர்
தமிழக அரசை ஆண்மையற்ற அரசாக கூறியதாக எச்.ராஜாவை சமூக வலைதளங்களில் அதிமுகவினர் விமர்சித்தவண்ணம் உள்ளனர். அமைச்சர்களும் எச்.ராஜாவை கடுமையாக விமர்சித்தனர். இதற்கு பதில் தரும் விதமாகவே எச்.ராஜா இன்று அமைச்சர்கள் செல்லூர் ராஜூ ஜெயக்குமாரைப் பற்றி பேசியிருக்கிறார். இந்த பேட்டிக்கு இன்னும் என்னென்ன பதில் வரப்போகிறதோ பார்க்கலாம்.